கர்நாடக மாநிலத்தில் 40 லட்சம் லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏவின் மகன் பிரசாந்த் மாதலை லோக் ஆயுக்தாவின் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதியின் பாஜக எம்எல்ஏவும், மைசூர் சாண்டல் சோப் தயாரிக்கும் கர்நாடகா சோப் மற்றும் டிடர்ஜெண்ட் எனும் மாநில அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் தலைவரான மாதல் விருபாக்சப்பாவின் மகன் பிரசாந்த் மாதல். இவர் பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் (BWSSB) தலைமை கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவர் காண்ட்ராக்டர் ஒருவரிடம் 40 லட்சம் லஞ்சம் வாங்கிய போது, கையும் களவுமாக பிடிபட்டார். இதை அடுத்து, லோக் ஆயுக்தாவின் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். பிரசாந்த் மாதல் வீட்டில் நடந்த சோதனையில் சுமார் 6 கோடி ரொக்கமும், அவரது அலுவலகத்திலிருந்து 1.7 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரசாந்த் மாதல் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் பாஜக எம்எல்ஏ மதல் விருபாக்சப்பாவையும் லோக்ஆயுக்தா போலீசார் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.