உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தின் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு - பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுரங்கப்பாதையில் நவம்பர் 12 அன்று அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மண் மூடியதால் 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக் கொண்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு படையினர் உள்ளிட்டவர்கள் மீட்புப் பணியை தொடங்கிய நிலையில், 12 நாட்களாக பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு 6 இஞ்ச குழாய் மூலம் உணவுகள் சுரங்கப் பாதைக்குள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஏற்பாட்டை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தரணி ஜியோ டெக் நிறுவனத்தினர் அமைத்து தந்த நிலையில், 2 நாட்களுக்கு முன் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களின் நிலைமை குறித்து வீடியோ வெளியானது. தொடர்ந்து 60 மீட்டருக்கு பிரம்மாண்ட குழாய் உள்ளே செலுத்தப்பட்டு, குழாய் வழியே தேசிய பேரிடர் மீட்புப்படையினர் உள்ளே சென்ற பின் ஒவ்வொரு தொழிலாளர்களாக மீட்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் 15 மீட்டருக்கு குழாயைச் செலுத்துவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மீட்புப் பணியின்போது, ஆகர் இயந்திரம் பொருத்தப்பட்டிருந்த கான்கிரீட் தளம் சேதமடைந்தது. இதனை சீரமைத்த பின், மீண்டும் துளையிடும் பணி தொடங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.