கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1876 ஜூலை 27 ஆம் நாள் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் பிறந்தார். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர். 1938 ஆம் ஆண்டு வெளியான அவருடைய ‘மலரும் மாலையும்’ தொகுதியில் 25 க்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்கள், 7 கதைப் பாட்டுகள் இடம்பெற்றிருந்தன. தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு என்ற பாடல் இன்றளவும் பிரபலமாக உள்ள அவரது குழந்தைப் பாடல்களில் ஒன்று. எட்வின் ஆர்னால்டு எழுதிய புத்தரின் வரலாற்றை ‘ஆசிய ஜோதி’ யாகத் தமிழில் தந்தார். பாரசீகக் கவிஞர் உமர் கயாமின் பாடல்களைத் தமிழுக்கு ஏற்ப எழுதினார். ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். ‘காந்தளூர்ச்சாலை’ பற்றிய ஆய்வு நூலை எழுதினார். 1922-இல் ‘மனோன்மணியம் மறுபிறப்பு’ என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம், திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 1940 டிசம்பர் 24 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரனார். கவிமணி என்ற பட்டம் வழங்கினார். 1954 செப்டம்பர் 26 ஆம் நாள் காலமானார். அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் தேரூரில் நினைவு இல்லம் அமைக்கப்பட்டது. 2005இல் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது.