வயநாடு நிலச்சரிவால் ஏற்பட்ட உயிர்சேதம், இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஆகிய காரணங்களால் கேரள மாநிலத்தில் சுமார் ஒரு வார காலம் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் மலைப்பகுதி மாவட்டமான வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் அதிகப்படியான உயிர்சேதம் ஏற்பட்டது.
இதில், சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மீட்புப்பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு, பொதுமக்கள், திரைக்கலைஞர்கள் பலரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நிலச்சரிவால் ஏற்பட்ட அதிகப்படியான உயிர்சேதம், இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஆகிய காரணங்களால், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு சார்பில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.