மணிப்பூரில் நடந்த வன்முறையில், இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் ‘மெய்டெய்’ (Meitei) என்ற பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களுக்கு ‘பட்டியல் பழங்குடியினர்' அந்தஸ்து வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இவர்கள் இம்பால் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் இருப்பதால், வாக்கு வங்கிக்காக ஆளும் பாஜகவும் இவர்களுக்கு பழங்குடி அந்தஸ்து தருவதாக தூபம் போட்டது. ஆட்சிக்கு வந்தால் பழங்குடி அந்தஸ்து தருகிறோம் என உசுப்பேற்றியது. அதன்படியே தற்போது பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டதால், கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு மெய்டெய் மக்கள் கோரிக்கை விடுக்கத் துவங்கினர். ‘மெய்டெய்’ மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில், உரிய முடிவு எடுக்குமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றமும் கடந்த ஏப்ரல் 19 அன்று மணிப்பூர் பாஜக அரசுக்கு உத்தரவிட்டது. பாஜக அரசும் அதனை ஏற்றுக் கொண்டு, விரைவில் அறிவிப்பு வெளியிடப்போவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வந்தது.
இதற்கிடையில், மெய்டெய்’ மக்கள் பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த குக்கி உள்ளிட்ட பழங்குடி பிரிவினர் மற்றும் ‘அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் மணிப்பூர் (ATSUM)’ அமைப்பு சார்பில், 7 மாவட்டங்களில் ‘பழங்குடியினர் ஒற்றுமை பேரணி’ நடத்தப்பட்டது. அப்போது, சுராசந்த்பூர் மாவட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். வீடுகள், கடைகள், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு இடங்களில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இருப்பதுடன், அசாம் ரைபிள்ஸ் மற்றும் ராணுவம் வரவழைக்கப்பட்டுப் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டது.
மணிப்பூர் வன்முறை குறித்து கவலை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், மணிப்பூரில் நடந்த வன்முறையில், இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 231 பேர் காயமடைந்துள்ளதாகவும், 1,700 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும், வன்முறை பகுதிகளிலிருந்து 35,000 பேர் மீட்கப்பட்டு வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரு.5 லட்சமும், படுகாயமடைந்தோருக்கு ரு.2 லட்சமும், சிறிய காயமடைந்தோருக்கு ரு.25 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.