புதுதில்லி, பிப். 18 - இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2021 டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் 2022 ஜனவரியில் வேலையின்மை கணிசமாக குறைந்தது. இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் (CMIE) தரவுகள் அடிப்படை யில் டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 7.9 சதவிகிதமாக இருந்தது. இது, 2022 ஜனவரியில் 6.57 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஒரே மாதத்தில் சுமார் 1.3 சதவிகிதம் வேலையின்மை அளவு குறைந்துள்ளது. 2022 ஜனவரியில் இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 66 லட்சமாக உள்ளது. ஆனால், ஒன்றிய அரசின் 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்ததற்குப் பிறகு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கு வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் இருந்த வேலை வாய்ப்பு சந்தையின் வேகம் பிப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் இல்லை. இதன்காரணமாக, 2021 டிசம்பரில் 7.9 சதவிகிதத்தில் இருந்து, 2022 ஜனவரியில் 6.57 சதவிகிதமாக சரிந்த வேலையின்மை விகிதம், 2022 பிப்ரவரி மாதத்தின் முதல் 16 நாட்களில் மட்டும் 7.6 சதவிகிதமாக மீண்டும் அதிகரித்துள்ளது. 2022 ஜனவரியில், நாட்டிலேயே அதிகபட்சமாக பாஜக ஆளும் ஹரியானாவில்தான் வேலையின்மை விகிதம் 23.4 சதவிகிதம் என்ற அளவிற்கு உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் ராஜஸ்தான் - 18.9 சதவிகிதம், திரிபுரா - 17.1 சதவிகிதம், ஜம்மு - காஷ்மீர் - 15 சதவிகிதம், தில்லி - 14.1 சதவிகிதம், இமாசலப் பிரதேசம் - 13.9 சதவிகிதம், பீகார் - 13.3 சதவிகிதம், கோவா - 11.6 சதவிகிதம் என இரட்டை இலக்கத்தில் வேலையின்மையைக் கொண்டிருக்கின்றன.