தில்லி நிர்வாக (திருத்த) மசோதா உள்பட, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இந்த 7 மசோதாக்களும் தற்போது சட்டமாகியுள்ளன. தில்லியில். குரூப் ‘ஏ’ அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடமாற்ற விவகாரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை அபகரித்து, தன்வசம் எடுத்துக் கொள்ளும் முயற்சியாக, தில்லி நிர்வாக (திருத்த) மசோதாவை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தது. இதனை கடந்த ஆகஸ்ட் 3 அன்று மக்களவையில் நிறைவேற்றிய மோடி அரசு, தனக்கு போதிய பலமில்லாத மாநிலங்களவையிலும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதாதளம், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றியது. இந்த மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கும் அனுப்பியது. இந்நிலையில், அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோல டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதாவும், ஆகஸ்ட் 7-இல் மக்களவையிலும், ஆகஸ்ட் 9-ஆம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்த மசோதாவுக்கும் குடியரசுத் தலைவர் முர்மு தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் இந்த மசோதாவும் சட்டமாகியுள்ளதாக ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டுவிட்டர் ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த இரு மசோதாக்களைப் போலவே, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, ஓட்டுநர் உரிமம் வழங்கல், வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஆதார் எண், திருமணப் பதிவு, அரசுப் பணி நியமனம் உள்ளிட்டவற்றுக்கு பிறப்புச் சான்றிதழை மட்டுமே ஆவணமாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான பிறப்பு மற்றும் இறப்பு சட்டத்திருத்த மசோதா, நன்னம்பிக்கை (ஜன் விஸ்வாஸ்) சட்டப் பிரிவுகள் திருத்த மசோதா, இந்திய கல்வி மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா, தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, கடலோரப் பகுதிகள் கனிம (மேம்பாடு மற்றும் ஒழுங்காற்று) திருத்த மசோதா ஆகியவற்றுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால், இந்த மசோதாக்களும் சட்டமாகியுள்ளன.