states

img

தில்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரிப்பு

தலைநகர் தில்லியில் காற்று மாசு அளவு தொடர்ந்து 5-வது நாளாக மிகவும் மோசமாக உள்ளது. இன்று (நவம்பர் 6) காலை நிலவரப்படி தில்லியில் காற்றின் தரக் குறையீடு (Air Quality Index – AQI) 488 ஆக உள்ளது. சஃபார் (SAFAR - System of Air Quality and Weather Forecasting And Research) கணிப்பின்படி கடந்த 4-ம் தேதி மாலை 4 மணிக்கு 415 ஆக இருந்த நிலையில், நேற்று (5-ம் தேதி) காலை 7 மணிக்கு 460 ஆகமோசமடைந்தது. இந்நிலையில் இன்று காலை இது 488 ஆக மிகவும் மோசமடைந்துள்ளது.

இதனால் தில்லிவாசிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளனர். இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்படும் அளவுக்கு தில்லியில் அன்றாடம் காற்று மாசு மக்களை மூச்சுத் திணற வைக்கிறது. இதற்கிடையில் தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இன்று (திங்கள்கிழமை) சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளை ஆலோசனைக்கு அழைத்துள்ளார்.

இந்நிலையில் காற்று மாசை எதிர்கொள்ள தில்லியில் கிராப்-4 (GRAP-4) கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்‌ஷன் ப்ளான் (Graded Response Action Plan) அமலுக்கு வந்துள்ளது.கிராப்-4 அமலாகியுள்ளதால் தில்லிக்குள் நுழைய சமையல் எரிவாயு சிலிண்டர் உள்பட மிகமிக அத்தியாவசியமான பொருட்களைக் கொண்டு வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி மிதமான இலகு ரக வாகனங்கள் தொடங்கி கன ரக வாகனங்கள் வரை அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கும் கெடுபிடி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்று மாசு அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொடக்கப் பள்ளிகளை நவ.10-ம் தேதி வரை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்று மாசின் நச்சுக்களில் இருந்து குழந்தைகளைக் காக்கும்வகையில் கிராப்-4இன் கீழ் பள்ளிகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் வேதனை:

தில்லி காற்று மாசு குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "எந்த ஒரு ஆரோக்கியமான நபருக்கும் காற்றின் தரக் குறையீடு 50 என்றளவில் இருந்தால்தான் சுவாசிப்பது எளிது. ஆனால் தில்லியில் தொடர்ந்து 400-க்கு மேல் காற்றின் தரக் குறியீடு மிகமிக மோசமாக உள்ளது. இதனால் ஆரோக்கியமான நபர்களுக்கும்கூட சுவாசப் பாதை பிரச்சினைகள் ஏற்படும். ஏற்கெனவே சுவாசப் பாதை பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அது உச்சபட்சமாக நுரையீரல் புற்றுநோய்வரை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது" என்று கவலை தெரிவித்தனர்.