states

img

ஆஸ்கருக்கு அனுப்பப்படாத சர்தார் உத்தம்:

விடுதலைப் போரில் மிகமுக்கியமான சம்பவமான ஜாலியன்வாலாபாக் படுகொலைக்குக் காரணமான ஆங்கிலேய அதிகாரி ஜெனரல் டயரை லண்டனில் சென்று சுட்டுக்கொன்று பழி தீர்த்துக்கொண்ட சர்தார் உத்தம் சிங்கின் வாழ்க்கையைச் சொல்லும் படம் சர்தார் உத்தம். அண்மையில் வெளிவந்து அநேகரின் பாராட்டுதல்களைப் பெற்ற சிறந்த படைப்பான இந்தப் படத்தை அயல்நாட்டுப் பிரிவு ஆஸ்கர் விருதுக்கு அனுப்பாததற்கு அதன் தேர்வுக்குழு விளக்கமளித்துள்ளது. ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாகவும் நேர்த்தியாகவும் உருவாக்கப்பட்டடுள்ள இந்த சர்தார் உத்தம் திரைப்படத்திற்கு நாடெங்கிலும் அமோக வரவேற்பு ஏற்பட்ட நிலையில் 15 பேர் கொண்ட ஆஸ்கருக்கான படத் தேர்வுக் குழுவினர் இந்தப் படத்தைத் தேர்வு செய்யவில்லை என்பது இந்திய ரசிகர்கள் மத்தியிலும் சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை உண்டுபண்ணிவிட்டது.  

இந்தப் படம் ஆங்கிலேயர்களின்மீது அதிகப்படியான வெறுப்பை ஏற்படுத்துவதாக இதற்குக் காரணம் சொல்கிறார் தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான இந்திரதீப் தாஸ்குப்தா. இதுவரையில் பேசப்படாத ஒரு விடுதலைப் போராட்ட வீரரைப்பற்றி மிக நேர்மையாகத்தான் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சர்வதேசத் தரத்தில், சிறப்பான ஒளிப்பதிவுடன் படம் உள்ளது. எனினும் உலகமய காலத்தில், இவ்வாறான வெறுப்பு நியாயமற்றது என்கிறார் அவர். விடுதலைப் போரே ஆங்கிலேயர்களுக்கு எதிராகத்தானே நடந்தது. எனவே, அவர்களை எதிர்ப்பதாகத்தானே யதார்த்தத்தில் இந்தப் படத்தின் கதைப்போக்கு இருக்க இயலும் என்பது சினிமா விமரிசகர்களின் கருத்தாக உள்ளது.  படம் மிகவும் நீளமாக இருக்கிறது. படத்தின் முக்கியக் காட்சியான உச்சகட்டத்திற்கு வருவதற்கே மிகவும் நீண்டநேரம் பிடிக்கிறது.

அதனால் சலிப்பேற்படுகிறது. மிகவும் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டிருந்தாலும் படத்தின் நீளம் ஒரு பெருங்குறை என்கிறார் இத் தேர்வுக்குழுவின் மற்றொரு உறுப்பினர் சுமித் பாசு. இந்தக் கருத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. எது எப்படியோ, வரும் ஆண்டின் மார்ச் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறவிருக்கிற 94 வது ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்க நம்முடைய முயற்சிகள் பலவும் ஏதாவதொரு காரணம் காட்டப்பட்டுத் தடுக்கப்பட்டே வருகின்றன. இந்தநிலையில் நமக்கொரு ஆறுதல் செய்தியும் உண்டு. நமது தமிழ் சினிமாவான “கூழங்கல்” - என்ற படம் ஆஸ்கர் தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.