கடந்த ஐந்தாண்டுகளில் எங்கள் அரசு மீது ஒரு ஊழல் குற்றச் சாட்டு கூட கிடையாது என கொஞ்சம் கூட கூச்சநாச்சமின்றி பொய்ப் பேசினார், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். மதுரையில் செவ்வாயன்று மீனாட்சி அம்மனை தரிசித்து விட்டு வந்த சில நிமிடங்களில் ‘ஊழல் குறித்து’ அவர் விளக்கமளித்தது அதிர்ச்சியளிப்பதாய் இருந்தது. மேலும், 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவதற்கான தொலைநோக்குத் திட்டத்தை பாஜக கொண்டுள்ளதாக ‘தம்பட்டம்’ அடித்தார். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் பாஜக சாதனை படைத்துள்ளதாக பெருமை யடித்த ராஜ்நாத் சிங், முன்பெல்லாம் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பயங்கரவாதம் பற்றிய செய்திகள் வந்தன; ஆனால், இன்று, பயங்கர வாத சம்பவங்கள் அரிதாகவே நிகழ்கின்றன என்றார்.