states

திப்பு சுல்தானைப் போல சித்தராமையாவின் கதையையும் முடித்து விட வேண்டுமாம்!

பெங்களூரு, பிப். 17 - கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவின் கதையை முடிக்க வேண்டும் என்று கர்நாடக உயர்கல்வித் துறை அமைச்சர் சி.என். அஸ்வத் நாராயணன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்திற்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு இப்போதே பிரச்சாரம் சூடுபிடித்து விட்டது. எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக, ஆளும் பாஜக தலைவர்கள் மதவெறியைக் கிளப்பி விடுவதும், தங்களை எதிர்ப்பவர்களைக் கொலை செய்வோம் என மிரட்டுவதுமாக கர்நாடக அரசியல் களத்தை வன்முறைக் களமாக மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். “நாங்கள் ராமர், அனுமான் பக்தர்கள். நாங்கள் அனுமானுக்கு பிரார்த்தனை செலுத்துகிறோம். நாங்கள் திப்பு-வின் சந்ததியினர் அல்ல. திப்புவின் சந்ததிகளை வீட்டுக்கு அனுப்புவோம். இந்த மாநிலத்திற்கு அனுமான் பக்தர்கள் தேவையா திப்புவின் வழித்தோன்றல்கள் தேவையா? நான் ஒரு சவால் விடுக்கிறேன். திப்புவின் தீவிர சீடர்கள் இந்த வளமான மண்ணில் உயிருடன் இருக்கக் கூடாது” என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல் இரண்டு நாட்களுக்கு முன்பு பேசினார். இந்த பேச்சுக்கான கண்டனங்கள் ஓய்வதற்கு உள்ளாகவே, கர்நாடக மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் சி.என். அஸ்வத் நாராயணன், சித்தராமை யாவுக்கு எதிராக கொலை வெறியைத் தூண்டி விட்டுள்ளார்.

மாண்டியாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அஸ்வத் நாராயண், “முன்னாள் முதல்வர் சித்த ராமையாவை, திப்பு சுல்தானை முடித்தது போல முடித்து விடுங்கள்” என பேசியுள்ளார். “உங்களுக்கு திப்பு (சுல்தான்) வேண்டுமா அல்லது (இந்துத்துவ சித்தாந்தவாதி) சாவர்க்கர் வேண்டுமா? இந்த திப்பு சுல்தானை (சித்தரா மையாவை) எங்கே அனுப்புவது? நஞ்சே கவுடா என்ன செய்தார்? அதே வழியில் அவரை (சித்தராமையா) முடிக்க வேண்டும்” என கூறியுள்ளார். இதற்கு “திப்பு கொல்லப்பட்டது போல் என்னையும் கொல்லுங்கள் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் நாராயண் வேண்டுகோள் விடுத்துள்ளார். அஸ்வத் நாராயண், ஏன் மக்களைத் தூண்டிவிடப் பார்க்கிறீர்கள்? துப்பாக்கியை நீங்களே எடுத்து வாருங்கள்” என சித்தராமையா பதிலடி அளித்துள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவரும்,  ‘மைசூர் புலி’ என அழைக்கப்பட்டவருமான திப்பு சுல்தான், கடந்த 1799ஆம் ஆண்டு, நவம்பர் 20-ஆம் தேதி நான்காவது ஆங்கிலோ-மைசூர் போரில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் படைகளால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். ஆனால், சங்-பரிவாரங்களோ, திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களுடன் போரிட்டு இறக்கவில்லை. ஒக்கலிகா மன்னர்களான உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா ஆகியோராலேயே கொல்லப் பட்டார் என கூறுகின்றனர். இதை வரலாற்றாசிரியர்கள் முற்றிலுமாக நிராகரித்தாலும் அதையே மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர்.  இதனையொட்டித்தான் திப்பு  சுல்தானை நஞ்சே கவுடா என்ன  செய்தாரோ, அதுபோல சித்தராமையா வின் கதையை நாம் முடித்து விட வேண்டும் என்று அஸ்வத் நாராயணன் கொலைவெறியைத் தூண்டியுள்ளார்.