கோவை,மே 2- கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியின் உதவியாளரிடம் தனிப்படை போலீசார் மே 2 அன்று விசாரணை நடத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவம் குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டி உள்பட அதிமுக பிரமுகர்கள், அங்கு வேலை செய்தவர்கள் என 210-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதிமுக வர்த்தகர் பிரிவு மாநில தலைவருமான சஜீவன், அவரது தம்பி சிபி மற்றும் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடமும் தனிப்படை ஐஜி சுதாகர் உள்ளிட்ட உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மே 2 அன்று இந்த வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியின் உதவியாளர் நாராயணசாமியிடம் கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.