states

அனைத்து சமூக மக்களும் கோவில் திருவிழாவிற்கு சென்று வழிபடுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜூன் 23-   அனைத்து சமூக மக்களும் கோவில் திருவிழாவிற்கு சென்று வழி படுவதை  இந்துசமய அறநிலையத் துறை  உறுதி செய்ய வேண்டும் என்றும் தனிப்பட்ட நபர்களுக்கு கோவில் திரு விழாவில் முதல் மரியாதை வழங்கக் கூடாது என்றும் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தர விட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா மலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா, மலக்கோட்டை கிராமத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஸ்ரீ சாந்தி வீரன் சாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆனி மாதம் 8 நாட்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இக்கோவில் இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள் ளது. இக்கோவிலுக்கு என தக்கார் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கோயில்க ளில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது என அறிவிப்பு வெளி யிடப்பட்டது. அதனை எதிர்த்தும் தலைப்பாகை அணியவும், குடை பிடிக்கவும், முதல் மரியாதை கோரியும் கடந்த வருடம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா, மலக்கோட்டை கிராமத்திலுள்ள சசி பாண்டிதுரை, பாலசுந்தரம், ஜெயபா லன் மற்றும் நவநீதன் ஆகியோர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவை தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் இந்த வருடம் திரு விழாவில் இவர்களால் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள் ளது.

மேலும் ஆனி மாத திருவிழா காலங்களில் இக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் அட்டவணைப் படுத்தப்பட்ட சமூகத்தினர் ஆகியோர் கோவிலில் உள்ளே அனுமதி வழங்கப் படுவது இல்லை. எனவே, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா, மலக்கோட்டை கிராமத்திலுள்ள  ஸ்ரீ சாந்தி வீரன் சாமி கோயில் ஆனி மாத திருவிழா வில் யாருக்கும் தலைப்பாகை அணிய வும் குடை பிடிக்கவும் முதல் மரியாதை வழங்கக் கூடாது. அட்டவணைப் படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்றும்  பழங்குடியின சமூகத்தை சேர்ந்த வர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி வழங்கவும், திருவிழாவில் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்க வேண்டும்” என கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா  பூர்வாலா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாகி நீதிபதி சுப்பிரமணியன் அமர்வு முன்பு வெள்ளியன்று  நடை பெற்றது.  அப்போது நீதிபதிகள், தனிப்பட்ட நபர்களுக்கு கோவில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்கக்கூடாது, அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் கோவில் திருவிழாவிற்கு சென்று வழிபடுவதை இந்துசமய அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும். இதனை ஸ்ரீ சாந்தி வீரன் சாமி கோவில் தக்கார் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.