திருவனந்தபுரம்,செப்.12- ரப்பருக்கு ரூ.300 ஆதரவு விலை அறிவிக்க வேண்டும், ரப்பர் தொழிலில் இருந்து வசூலான ரூ.1788 கோடி வரி அபராதத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் செப்டம்பர் 14 வியாழனன்று தில்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படுகிறது. நாட்டின் 82 சதவிகிதம் ரப்பர் கேரளத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு 12 லட்சம் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், இரண்டு லட்சம் பால் வடிக்கும் தொழிலாளர்கள், 25 ஆயிரம் சிறு வியாபாரிகள் மற்றும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இது தொடர்பான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். விவசாய நிலத்தில் 22 சதவீதம் ரப்பர். அதன் விலை வீழ்ச்சி மாநிலத்தின் நிதி நிலையை கடுமையாக பாதித்துள்ளது. விவசாயிகளை சூறையாடுவதற்காக தொழில்துறையினர், வாகன ரப்பர் உற்பத்தியாளர்கள் சங்கத்தை உருவாக்கினர். மோடி அரசின் ஆதரவுடன் ரப்பர் விலையை ரூ.120 வரை குறைத்தார்கள். ரப்பர் ஒரு தொழில்துறை தயாரிப்பு என்றும், விவசாயிகளுக்கு ஆதரவு விலை வழங்க முடியாது என்றும் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், அறிவித்தார். மற்ற எல்லா இடங்களிலும் விவசாய உற்பத்தி பொருளாகவே ரப்பர் உள்ளது. ஒன்றிய அரசு ஆதரவு விலை அறிவித்த 25 பயிர்களில்கூட ரப்பரை சேர்க்காதது பாகுபாடு ஆகும். ரப்பர் சார்ந்த தொழில்களுக்கு ஒன்றிய நிதி ஒதுக்கீடு, தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ரப்பர் கலவை பயன்படுத்தல், விவசாயப் பயிர்களாக கருதி சிறப்பு தொகுப்பு ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தில்லி பேரணி நடைபெறுகிறது. இதில் கேரளம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.