புதுக்கோட்டை, அக்.27 - புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 அணைக்கட்டுகளை புனரமைப்பு செய்வதற்கு ரூ.8.57 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளதால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்னியாறு, தெற்கு வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகள் உள்ளன. இந்த ஆறு களில் மழைக் காலத்தில் மட்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஆறு களில் பல்வேறு இடங்களில் உள்ள அணைக்கட்டுகளின் மூலம் ஏரி, கண்மாய்களுக்கு தண்ணீர் திருப்பி பாசனம் செய்யப்படுகிறது. இந்நிலையில், அவ்வப்போது ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு வந்தாலும் கூட அணைக்கட்டுகள் முறையாக பரா மரிக்கப்படாமல் இருந்தன. இதனால் தண்ணீரை பகிர்ந்து பயன்படுத்துவதில் சிரமம் இருந்து வந்தது. இதையடுத்து, அணைக்கட்டுகளை புனரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் மாவட்டத்தில் 6 அணைக்கட்டுகளை புனரமைக்க ரூ.8.57 கோடியையும், ஒரு குளத்தை புனரமைக்க ரூ.96.99 லட்சத்தையும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், “கறம் பக்குடி அருகே மானிய வயலில் அக்னியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள அணைக்கட்டு பழுதடைந்து உள்ளது. இதைப் புனரமைக்க ரூ.95.66 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரிமளத்தில் உள்ள கூடலூர் அணைக்கட்டில் வலது மதகை பழுது பார்த்து, பாதுகாப்புச் சுவரைப் புதுப்பிக்க ரூ.1.48 கோடியும், பெருமரு தூரில் உள்ள மணலூர் அணைக்கட்டை புனரமைக்க ரூ.96.37 லட்சமும், அறந் தாங்கி அருகே புதுவாக்கோட்டை அணைக்கட்டை புனரமைக்க ரூ.1.44 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. திருமயம் அருகே கும்மங்குடியில் உள்ள அணைக்கட்டை புனரமைக்க ரூ.1.20 கோடியும், கடையக்குடியில் உள்ள ஹோல்ஸ்வொர்த் அணைக் கட்டு மற்றும் அதில் உள்ள திருகு பல கைகளை புதுப்பிக்க ரூ.2.51 கோடி என மொத்தம் 6 அணைக்கட்டுகளை புன ரமைக்க ரூ.8.57 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. மேலும், ஆலங்குடி அருகே வெண்ணாவல்குடியில் உள்ள பெரிய குளத்தை புனரமைக்க ரூ.96.99 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் தெற்கு வெள்ளாறு வடி நிலக் கோட்டத்தின் மூலம் மேற்கொள் ளப்பட உள்ளன. இப்பணிகள் விரை வில் தொடங்கும்” என்றார்.