states

ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் தள்ளுபடி

சென்னை,ஆக.25- எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் அதிமுகவை ‘கைப்பற்றும்’ ஓ.பன்னீர்செல்வத்தின் முயற்சிக்கு  பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2022 ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை செல்லாது என அறி விக்கக் கோரியும், இந்த பொதுக்குழு சட்டவிரோத மானது, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், பொதுச் செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி யும், தங்களைக் கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்கக் கோரியும்  ஓ.பன்னீர்செல் வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இதனை  விசாரித்த உயர் நீதிமன்றம், ஜூலை 11  நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும்  என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தது. 

இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி குமரேஷ்பாபு அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று இடைக்கால உத்தரவிட்டிருந்தார். இந்த இடைக்கால உத்தரவை ரத்து செய்யக் கோரியும், உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேரும் மேல்முறை யீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்குகளின் இறுதி  விசாரணை தொடங்கியது. 7 நாட்கள் இந்த வழக்கில் இருதரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் ஆகஸ்ட் 25 சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தலையிட முடியாது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம்  உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்கிறோம். பொதுக்குழு கூட்டம் தொடர்பான விரி வான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அதன் அடிப்படையிலேயே பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தகுதி நீக்கம் உட்பட பொதுக்குழு தீர்மானங்களுக்குத் தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை. உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது” என்று தீர்ப்பளித்தனர்.