வெகு காலத்திற்கு முன், திபெத் பள்ளத்தாக்கில் இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் தந்தை இறந்துவிட்டார். அவர்கள் ஒரு பெரிய வீட்டில் தங்கள் தாயாருடன் வாழ்ந்து வந்தார்கள். மூத்தவன், அதிபுத்திசாலி. ஆனால் கருணையில்லாத வன். சுயநலவாதியும் கூட. ஆனால் இளையவனோ கருணையே உருவானவன், எளிமையானவனும் கூட. ஆயினும் அவன் அண்ணனைப்போல் அதிபுத்திசாலி கிடையாது. மூத்தவன்தான் குடும்பத்தின் வியா பாரத்தைக் கவனித்துக் கொண்டு தன் தாயாரையும், தம்பியையும் காப்பாற்றி வந்தான். இளையவன் அண்ணனுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பினாலும், அவனுக்கு புத்திசாலித்தனம் குறைவாக இருந்ததால், தன் அண்ணனுக்குப் பெரிய அளவில் உதவ முடிய வில்லை. இதனால் மூத்தவன், இளையவனைத் தொடர்ந்து தன்னுடன் வைத்துக்கொண்டு வியாபாரத்தைக் கவனிக்க முடியாது என்று நினைத்தான். ஆகையால் ஒருநாள் அவன் தன் தம்பியை அழைத்து, அவனிடம் “இனியும் நான் உன்னை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்ய முடியாது, உன்னையும் சேர்த்து ஆதரிக்கவும் முடியாது, நீ தனியே சென்று உலகத்தில் உனக்கென்று சொந்தமாக உன் எதிர்காலத்தைத் தேடிக்கொள்,” என்று கூறி விட்டான்.
இதனால் மிகவும் வருத்தம் அடைந்த இளையவன் அண்ணனின் இத்தகைய முடிவுக்கு எதிராக எவ்விதமான எதிர்ப்பையும் காட்டவில்லை. அவனிடம் எவ்விதமான சண்டையும் போடவில்லை. அவனுக்குச் சொந்தமான ஒருசில பொருட்களை எடுத்துக்கொண்டு, பிரியா விடை சொல்வதற்காகத் தன் தாயாரிடம் போய் சொல்லி யிருக்கிறான். அவனுடைய தாயார், தன் மூத்த மகனின் செயலால் ஆத்திரம் அடைந்தார். அவனுடன் தொடர்ந்து இருக்கவும் விரும்பவில்லை. எனவே தன் இளைய மகனுடன் அவரும் புறப்பட்டுவிட்டார். மறுநாள் காலை அவர்கள் இருவரும் மலைப்பாதை யில் நடந்து சென்றார்கள். மாலை நேரம் வந்ததும் எங்கா வது தங்க வேண்டுமே என்று முடிவெடுத்து சுற்றிப் பார்த்த போது அங்கே குடிசை ஒன்று இருப்பதைப் பார்த்தார்கள். குடிசையை நோக்கிச் சென்று பார்த்தபோது, அந்தக் குடிசையில் யாருமே இல்லை. அதிலே இருந்தவர்கள் அதைக் காலி செய்துவிட்டு வேறெங்கோ சென்று விட்டார்கள் எனத் தெரிய வந்தது. எனவே இவர்கள் இருவரும் அங்கேயே தங்கிவிட்டார்கள்.
மறுநாள் காலை அவன் ஒரு கோடரியை எடுத்துக் கொண்டு மலைப்பகுதிகளில் சென்று வளர்ந்திருந்த மரங்களை வெட்டத் தொடங்கினான். மாலையில் கணிச மான அளவிற்கு விறகுகள் அவனிடம் சேர்ந்துவிட்டன. அவற்றை நகரத்துக்கு எடுத்துச் சென்று, சந்தையில் நல்ல விலைக்கு விற்றான். இதனால் சந்தோஷம் அடைந்த அவன், குடிசைக்குத் திரும்பிவந்து தன் தாயிடம் பணத்தைக் கொடுத்து, “இனி நீ கவலைப்பட வேண்டாம் அம்மா, நம் இருவருக்கும் நான் நிறைய சம்பாதிக்க முடியும். அதன்மூலம் உன்னை மிக எளிதாகக் காப்பாற்றுவேன்,” என்றான். மறுநாள் காலையும் அதேபோன்று தன் கோடரியுடன் மலைப்பாதையில் நடந்து சென்று மரங்களை வெட்டினான். மேலும் நல்ல மரங்களைத் தேடி அவன் மலையில் மேலும் வெகு தூரத்திற்கு ஏறிச் சென்றான். அங்கே ஒரு மலைக்குகையில் ஒரு சிங்கம் கல்லால் செதுக்கப்பட்டி ருப்பதைக் கண்டான். இதனைப் பார்த்ததுமே அவனுடைய சிந்தனையோட்டம் இது இந்த மலையைக் காத்திடும் கடவுளாகத்தான் இருக்க வேண்டும் என்கிற முறையில் ஓடியது. மறுநாள் வரும்போது, மெழுகுவர்த்தி இரண்டு வாங்கி வந்து அதன் முன் கொளுத்தி வைத்து, அதனிடம் பிரார்த்தனை செய்தான். இதேபோன்று ஒருசில நாட்கள் தொடர்ந்து அவன் செய்து வந்தான். ஒருநாள், என்ன ஆச்சர்யம். கல் சிங்கமானது உயிர் பெற்று, வாயைத் திறந்து “உன் பிரார்த்தனைக்கு மகிழ்ச்சி. நாளை இதே நேரம் நீ வரும்போது ஒரு பெரிய வாளியும் கொண்டு வா. உனக்குத் தேவையான செல்வத்தை நாள் கொடுப்பேன்,” என்று கூறியது.
மறுநாள் அவ்வாறே அவன் சென்றபோது, சிங்கம் உயிர்பெற்று, “மிகவும் நல்லது. இப்போது நான் சொல்கிற மாதிரி செய். நீ கொண்டுவந்த வாளியை என் வாயினரு கில் காட்டு. என் வாயிலிருந்து தங்கக் காசுகளாகக் கொட்டும். கீழே சிந்தாமல் அதனை நிரப்பிக்கொள். எச்சரிக்கை, கீழே ஏதேனும் சிந்திவிட்டால் நிலைமை விபரீதமாக மாறிவிடும்,” என்று கூறியது. இவனும் அது சொன்னமாதிரியே தங்கக் காசுகளை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நிரம்பியதும், “போதும்” என்று கூறிவிட்டான். சிங்கமும் தங்கக் காசுகள் கொடுப்பதை நிறுத்திக்கொண்டுவிட்டது. பின்னர் இவன் அவற்றை எடுத்துக்கொண்டு தன் தாயிடம் கொண்டுவந்து கொடுத்தபோது ஆரம்பத்தில் அவர் பயந்தாலும், பின்னர் மகன் விவரங்களை விவர மாகச் சொல்லியபின், “இனி வரும் காலம் நமக்கு நல்ல காலம்” என்று கூறினார். பின்னம் அந்தக் காசில் தாயும், மகனும் ஒரு பெரிய பண்ணை இல்லத்தை வாங்கினார்கள். ஏராளமாகக் கால்நடைகளை வளர்த்தார்கள். மிகவும் வசதியாக வாழ்ந்தார்கள்.
தன் தம்பியும், தாயாரும் மிகவும் வசதியுடன் வாழ்ந்து வருவது அண்ணனுக்குத் தெரிய வந்தது. எப்படித் தம்பிக்கு இந்த வசதி வந்தது என்று தெரிந்துகொள்வதற் காக அவன் தன் மனைவியுடன் தம்பி வீட்டுக்கு வந்தான். தாயார் பெரியவன் மீதிருந்த கோபத்தையெல்லாம் மறந்துவிட்டு தாயுள்ளத்துடன் அவனையும் அவன் மனைவியையும் வரவேற்றாள். வெளியே சென்றிருந்த தம்பியும் சிறிது நேரத்தில் அங்கே வந்து சேர்ந்தான். பின்னர் சிறிது நேரம் கழித்து, அண்ணன், தன் தம்பியுடம் எப்படி இவ்வளவு வசதி வந்தது என்று கேட்டிருக்கிறான். தம்பிதான் மிகவும் வெள்ளந்தியானவனாயிற்றே. அவன் நடந்தது அனைத்தை யும் அப்படியே அண்ணனி டம் தெரிவித்தான். பிறகு அவன் அண்ண னும் தம்பி செய்தது போன்றே அந்தக் கல் சிங்கம் இருந்த இடத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்தான். அப்போது அந்தக் கல் சிங்கம் அவனிடம், “நீ யார்?” என்று கர்ஜனையுடன் கேட்டது.
இவனும் தன் தம்பிக்கு உன் தயவால் கிடைத்த தங்கக் காசுகள் குறித்துக் கூறிவிட்டு, எனக்கும் அதுபோல் தேவை என்று கோரினான். சிங்கம் அவனுடைய தம்பியி டம் கூறியதைப் போலவே மறுநாள் ஒரு வாளியுடன் வரச் சொல்லியது. இவனும் மறுநாள் அதேபோல் சிங்கத்தி டம் சென்றபோது, சிங்கம் அவனிடம், “மிகவும் நல்லது. இப்போது நான் சொல்கிற மாதிரி செய். நீ கொண்டுவந்த வாளியை என் வாயினருகில் காட்டு. என் வாயிலிருந்து தங்கக் காசுகளாகக் கொட்டும். கீழே சிந்தாமல் அதனை நிரப்பிக்கொள். எச்சரிக்கை, கீழே ஏதேனும் சிந்தி விட்டால் நிலைமை விபரீதமாக மாறிவிடும்” என்று கூறியது. இவன் மிகப்பெரிய வாளியாக எடுத்துச் சென்றான். சிங்கம் சொன்ன மாதிரியே தங்கக்காசுகளைக் கொட்டியது. ஆனால் இவனுக்குப் போதும் என்று சொல்ல மனமே வரவில்லை. ஒரு எல்லைக்குப்பின் தங்கக்காசுகள் தரையில் சிந்தத் தொடங்கின. சிங்கத்திற்குக் கோபம் வந்துவிட்டது. அவனிடம் “ஒரு பெரிய தங்கக்காசு என் தொண்டையில் சிக்கிக்கொண்டு விட்டது. அதனை எடு” என்று அவனிடம் கூறியது. அவன் கையை அதன் வாய்க்குள் விட்டான். அவ்வளவு தான். சிங்கம் வாயை மூடிக்கொண்டது. பின் கல்லாகி விட்டது. இவனால் கையை எடுக்க முடியவில்லை. வாளியி லிருந்த தங்கக்காசுகளும் சாதாரண கற்களாகவும், மண்ணாகவும் மாறிவிட்டன. பின்னர் இவனுடைய மனைவி தன் கணவனைக் காணாது தேடிக்கொண்டு வந்துவிட்டார். வந்தால் தன் கணவனின் கைகள் கல் சிங்கத்தின் வாய்க்குள் மாட்டிக்