states

img

இரண்டரை லட்சம் பொங்கல் செங்கல்: ஆற்றுக்கால் சேகரிப்பில் 30 வீடுகள்

திருவனந்தபுரம், மே 7- ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் கனல் தணிந்த பொங்கல் அடுப்புகளின் செங்கற்கள் இனி 30 பேரின் கனவுகளுக்கு சுவர்களாகவும் நிழலாகவும் மாற உள்ளன. ஆற்றுக்கால் பொங்கலுக்குப் பிறகு மாநகராட்சியின் தலைமையில் சேகரிக்கப்பட்ட செங்கற்கள் சுமார் முப்பது குடும்பங்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளன. மார்ச் 7 அன்று பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள், சுமார் 2,50,000 செங்கற்கள் தன்னார்வலர்கள் மற்றும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களால் சேகரிக்கப்பட்டன. தகுதியுடையவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள், விதவைகள், படுத்த படுக்கையான நோயாளிகள், தீவிர நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் மிகவும் ஏழ்மையான பிரிவைச் சேர்ந்தவர்கள் அக்கறை யுடன் சேர்க்கப்பட்டனர்.

பெறப்பட்ட 147 விண்ணப்பங்களில் முதற்கட்டமாக 52 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதிலிருந்து, குறைந்தபட்சம் 30 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் செங்கல் வழங்க மாநகராட்சி நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும், வீடு கட்டும் இடத்திற்கு செங்கற்களை வழங்குவதற்கான வசதியையும் மாநகராட்சி செய்து வருகிறது. மூன்று பேருக்கு செங்கற்கள் வழங்கப்பட்டன. ஆற்றுக்கால் கோயில், தலைமைச் செயலகம், பல்கலைக்கழகக் கல்லூரி, தம்பானூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து செங்கல்கள் சேகரிக்கப்பட்டு புத்தரிக்கண்டம் மைதானத்தில் சேமிக்கப்பட்டன. திருவிழாவின்போது, மாநக ராட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக-வின் அழைப்பின் பேரில் சிலர் தாங்கள் பயன்படுத்திய செங்கற்களை உடைத்து வீசி எறிந்தனர். பொங்கலுக்குப் பிறகு அடுப்பு கட்டப் பயன்படும் செங்கற்களை விட்டுச் செல்வது வழக்கம். செங்கற்களை மற்ற கழிவுகளுடன் சேகரித்து அப்புறப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொண்டதையடுத்து, தேவைப்படுவோருக்கு செங்கல் வழங்கும் இலக்கை மாநகராட்சி எட்டியது. 2018ஆம் ஆண்டு முதல், மாநகராட்சி செங்கற்களை சேகரித்து வீட்டுத் திட்டங்களுக்கு பயன்படுத்தத் தொடங்கியது. அதன்மூலம் முதல் வருடத்தில் ஒன்பது பேருக்கு வீடு தயார் செய்யப்பட்டது.