♦ போதைப்பொருள் கோளாறுக்கு புதிய சிகிச்சை முறை
போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கும் அதிக அளவு உணவு விரும்புவோருக்கும் அந்த அதீத உணர்வு உண்டாவது குறித்த ஆய்வில் அந்தப் பழக்கத்தினால் மூளைப் பகுதியில் ஏற்படும் வகைமாதிரிகள்(pattern) கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்துவோர்,அதிக உணவு விரும்பவோர் மற்றும் இப்பழக்கங்கள் இல்லாதவர் என இரு குழுக்களுக்கும் போதைப்பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் படங்கள் காட்டப்பட்டன. fMRI எனும் முறையில் அவர்கள் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. போதைப்பொருள்,உணவு ஆகிய இரண்டுவிதமான தூண்டுதலுக்கும் மூளையில் ஒரே விதமான மாற்றமே காணப்பட்டது. எதிர்காலத்தில் அழுத்தம் அல்லது எதிர்மறை உணர்வுகள் எவ்வாறு போதைப்பொருளையோ அல்லது நாம் அதீதமாக விரும்பும் உணவையோ நாட வைக்கிறது என்பதை அறிய முடியும்.இதன் மூலம் போதைப்பொருள் கோளாறு உள்ளவர்களைக் கண்டறிவதுடன் அவர்களில் யாருக்கு ஒரு குறிப்பிட்ட சிகிச்சை பலனளிக்கும் என்பதை அறிவதற்கும் உதவலாம்.
♦ எரிகற்கள் மூலம் பூமிக்கு தண்ணீர் வந்ததா?
2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 அன்று இங்கிலாந்து நாட்டின் வடபகுதியில் ஒரு கால்பந்து அளவு பெரிய எரிகல் விழுந்தது. சூரிய வெளிமண்டலத்தை சுற்றிக்கொண்டிருக்கும் குறுங்கோள் ஒன்றிலிருந்து அது வந்துள்ளதும் அதில் பூமியில் உள்ள தண்ணீரை வேதியியல் ரீதியாக ஒத்த நீர் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அது தரையில் விழுந்த 12மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டதால் மற்ற பொருட்களால் அது மாசு படவில்லை.இதற்கு முன் எடுக்கப்பட்ட எரிகற்கள் இவ்வளவு விரைவாக எடுக்கப்படவில்லை என்கிறார் லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி ஆஷ்லே கிங். எரிகற்களை அவதானிக்கும் காமிராக்கள்,மற்றும் அந்தப் பகுதியிலிருந்த கண்காணிப்புக் காமிராக்கள் கொண்டு ஆய்வு செய்ததில் அந்த எரிகல் ஜூபிட்டரை சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு குறுங்கோளிலிருந்து 300000ஆண்டுகளுக்கு முன் தன பயணத்தை தொடங்கியது கண்டறியப்பட்டுள்ளது. இந்த எரிகல்லை சுத்தம் செய்து சூடு படுத்துவது,எலெக்ட்ரான்கள்,எக்ஸ் ரே,லேசர் போன்றவற்றால் மோதுவது ஆகிய சோதனைகள் மூலம் அதில் உள்ள மூலகங்கள் ,தாது உப்புக்கள் ஆகியவற்றை கண்டறிந்தனர்.அது கார்பன் செறிவுள்ள காண்டிரைட் எனப்படும் பாறைக்கல். அதில் 11%தண்ணீர் உள்ளது. அதில் உள்ள ஹைடிரஜன், டியுட்டிரியம் எனும் வகையை சேர்ந்தது. இதன் மூலம் தொடக்கத்தில் பூமிக்கு தண்ணீர் விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் குறுங்கோள்களிலிருந்து வந்திருக்கும் என்கிறார் கிங்.இந்த எரிகற்களில் அமினோ அமிலங்களும் பிற கரிம பொருட்களும் இருப்பது தெரிய வந்துள்ளது. இவைதான் உயிரின் அடிப்படையான டிஎன்ஏவின் கட்டமைப்புக் கூறுகள் ஆகும்.மேலும் ஆய்வுகள் செய்து இந்த மூலக்கூறுகள் விண்குறுங்கோள்களில் எவ்வாறு உண்டாகியிருக்கும், அவற்றை ஒத்த அங்ககப் பொருட்கள் பூமிக்கு எவ்வாறு அளிக்கப்பட்டிருக்கும் என்பதை அறியலாம். விண்கலங்கள் சேகரித்த ருகு மற்றும் பென்னு ஆகிய குறுங்கோள் எரிகற்கள் மாதிரிகளை இந்த எரிகல்லுடன் ஒப்பிட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்கிறார் அரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்மண்டல ஆய்வாளர் மீனாக்ஷி வாத்வா. இந்த மூன்று கற்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தொடக்க கால சூரிய மண்டல அமைப்பின் முழுமையான சித்திரத்தை அமைக்கலாம்;அது எவ்வாறு இன்றைய நிலைமையை அடைந்தது என்பதையும் காணலாம்.
♦சிந்தனை மூலம் பேச்சுத் திறன்
பக்கவாதத்தினாலோ வேறு நோய்களாலோ பேச்சுத் திறனை இழந்தவர்கள் மூளையில் சிந்திக்கும் சொற்களை பேச்சாக மாற்றும் முறையை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு முன் கண் இமைகளின் அசைவின் மூலம் ஒருவர் தெரிவிக்க விரும்பும் பேச்சை வெளிப்படுத்தும் கருவிகள் உள்ளன.ஆனால் இந்த முறை எல்லோராலும் கையாள இயலாது.இப்போது கண்டுபிடிக்கப்பட்ட முறையில் ஒருவர் தான் விரும்புவதை மனதில் நினைத்தால் போதும். மூளையினுள் பொருத்தப்பட்ட மின்முனைகள் சொற்களோடு தொடர்புடைய நரம்பு சமிக்கைகளை உணர்கிறது.பின் அவை சொற்களாக மாற்றப்பட்டு கணினி நிரல்கள் மூலம் கேட்கக்கூடிய பேச்சாக வெளிப்படுகிறது. இந்த சோதனையில் கழுத்துக் கீழே பக்கவாதம் வந்த ஒருவர் சிந்தித்த எட்டு சொற்களை கால்டெக் கழகத்தை சேர்ந்த நரம்பியல் நிபுணர் சாரா வான்டெல்ட் சரியாக கண்டறிந்தார்.இரு மொழி தெரிந்த அந்த நோயாளி சிந்தித்த ஆங்கில மற்றும் ஸ்பானிய சொற்களை ஆய்வாளர்களால் அறிய முடிந்தது.பேச்சு மற்றும் கை அசைவுகளுடன் தொடர்புடைய மூளையின் பின் பரைட்டல் கார்டெக்ஸ் பகுதியில் நரம்பு செல்களின் சமிக்கைகளை மின்முனைகள் எடுத்துக் கொண்டன.அந்தப் பகுதியில் பொருத்தப்படும் சாதனம் காலப்போக்கில் கைகளின் அசைவுகளை செய்யும் கருவிகளை இயக்கலாம் என்கிறார் சாரா வான்டெல்ட். இந்த விசயத்தில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி சீன் மேட்ஸ்ஜர் இன்னொரு விதத்தை செய்து காட்டியுள்ளார். பக்கவாதத்தினால் 15ஆண்டுகளாக பேச முடியாத ஒருவர் ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு வார்த்தையை மனதில் நினைத்துக் கொண்டார்.எடுத்துக்காட்டாக ஏ என்பதற்கு ‘ஆல்ஃபா’ இ என்பதற்கு ‘எக்கோ’ . இந்த எழுத்துகளை இணைத்து அவர் வாக்கியங்களை அமைத்தார்.இதன் மூலம் நிமிடத்திற்கு ஏழு வார்த்தைகளை உண்டாக்கினார்.வழக்கமான பேச்சுக் கருவிகள் உண்டாக்கும் நிமிடத்திற்கு ஐந்து வார்த்தைகளை விட இது வேகமானது.நாம் சாதாரணமாக நிமிடத்திற்கு 150 வார்த்தைகள் பேசுகிறோம். ஆகவே இந்த முறைகள் மூலம் வார்த்தைகள் உண்டாவதை வேகப்படுத்த வேண்டும்;மேலும் துல்லியமாக்க வேண்டும். தீவிரமான பேச்சுக் குறைபாடு உடையவர்களுக்கு இது பயன்படுமா என்று தெரியவில்லை.