science

img

மனித ரத்த மாதிரிகளில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

மனித உடலில் இருந்து எடுத்த ரத்த மாதிரிகளில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை நெதர்லாந்து விஞ்ஞானிகள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர்.

`என்விரான்மெண்ட் இண்டர்நேஷனல்’ என்ற அறிவியல் ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவுகளின் படி, நாம் வாழும் சூழலில் நம்மைச் சுற்றியுள்ள சிறிய பிளாஸ்டிக் துண்டுகள் நமது ரத்தத்தில் உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. 

பிளாஸ்டிக் பொருள்களின் வேதிப்பொருள்களான பாலியெத்லின் டெரிஃப்தலேட், பாலியெத்லிக், பாலிமர்கள் முதலானவை ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மனித ரத்த மாதிரிகளில் கிடைத்ததாகவும், பாலிப்ரோப்லீன் என்ற வேதிப்பொருளின் அளவைத் துல்லியமாகக் கணக்கிட முடியாத அளவுக்குக் குறைவாகச் ரத்தத்தில் சேர்ந்திருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாலியெத்லின் டெரிஃப்தலேட் என்ற வேதிப்பொருள் சோடா பாட்டில்கள், குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றிலும், பாலியெத்லீன் என்பது பால் பாட்டில்கள், வீட்டில் பயன்படுத்தப்படும் க்ளீனர்கள் முதலானவற்றின் மூலமாகவும், வெள்ளை பாலிமர்கள் பிளாஸ்டிக் பொருள்கள், சிடி, டிவிடி முதலானவை மூலமாகவும் மனித ரத்தத்தில் சேர்கின்றன.

சுமார் 22 பேரின் ரத்த மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, சராசரியாக ஒவ்வொருவரின் ரத்தத்திலும் ஒரு மில்லி லிட்டருக்கு சுமார் 1.6 மைக்ரோகிராம் அளவிலான பிளாஸ்டிக் வேதிப்பொருள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.சோதனை செய்யப்பட்டதில் நான்கில் ஒருவரின் ரத்த மாதிரிகளில் கணக்கிடும் அளவுக்குப் பிளாஸ்டிக் பொருள்கள் எதுவும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. 

ஆம்ஸ்டெர்டாம் நகரத்தின் வ்ரிஜே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஹீதர் லெஸ்லீயின் குழுவினர் மனித ரத்ததில் மைக்ரோ, நானோ அளவிலான பிளாஸ்டிக் பொருள்களைக் கணக்கிடும் முறையை உருவாக்கியுள்ளனர். பிளாஸ்டிக் பொருள்களின் அடிப்படை வேதிப்பொருள்களை சுமார் 22 பேரிடம் சோதனை செய்ததில் இந்த ஆய்வு முடிவு பெறப்பட்டுள்ளது. பரிசோதனை செய்யப்பட்டவர்களுள் நான்கில் மூவரின் ரத்தத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் இருந்ததாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் புதிய ஆய்வில் மக்கள் தாங்கள் வாழும் சூழலிலிருந்து மைக்ரோ அளவிலான பிளாஸ்டிக் பொருள்களை உறிஞ்சிக் கொள்வதாகவும், அதன் அளவுகளை ரத்தத்தில் கணக்கிட முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.