politics

img

பாலகோட் குறித்த மோடியின் சர்ச்சை பேச்சு - அறிக்கை கேட்கும் தேர்தல் ஆணையம்


மும்பை,

பாலகோட் தாக்குதல் குறித்த மோடியின் சர்ச்சை பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. இது பாஜகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. 

மகாராஷ்டிராவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புல்வாமா தாக்குதல் மற்றும் பாலகோட் தாக்குதல் பற்றி பேசினார். பிரதமர் மோடியின் பேச்சு குறித்து இந்திய தேர்தல் ஆணையம், மகாராஷ்டிரா தலைமை தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

பாலகோட்டில் இந்திய விமானப்படை, தீவிரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதை பாஜக, தனது அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தி வருகிறது என்று சென்ற மாதம் எதிர்க்கட்சிகள் புகார் அளித்தன. அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம், ‘ராணுவம் என்பது பொதுவான அமைப்பு. அது அரசியலுக்குள் இழுக்கப்படக் கூடாது' என்று அறிக்கை வெளியிட்டது. 

இந்நிலையில் நேற்று லட்டூரில் பேசிய பிரதமர் மோடி, ‘இந்த தேர்தலில் முதன்முறையாக ஓட்டுப் போடப் போகும் குடிமக்களுக்கு நான் ஒன்றை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். உங்களின் முதல் ஓட்டு, பாலகோட்டில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டாமா? புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்காக உங்கள் ஓட்டு இருக்க வேண்டாமா' என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார். 

அவர் தொடர்ந்து, ‘தீவிரவாதத்தை அதன் பிறப்பிடத்திலேயே அழிப்பதுதான் புதிய இந்தியாவின் கொள்கை' என்றார். பிரதமரின் இந்த கருத்துகளுக்கு விளக்கம் கேட்டுதான் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.


;