politics

img

கொரோனா பரிசோதனைக் கருவிகளை அதிக விலைக்கு வாங்கிய மர்மத்தை விளக்குக!

மத்திய, மாநில அரசுகளுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை,ஏப்.27- கொரோனா பரிசோதனைக் கருவிகளை அதிக விலைக்கு வாங்கியதிலுள்ள மர்மத்தை மத்திய, மாநில அரசுகள் விளக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்றை பரிசோதிப்பதற்காக சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள அதிவிரைவு பரிசோதனைக் கருவிகள் (Rappid Test Kid) வாங்கியதில் பல கோடி ரூபாய் சில இடைத்தரகர் கம்பெனிகள் லாபம் ஈட்டியுள்ள விபரத்தினை தில்லி உயர்நீதிமன்றம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இந்த அளவிற்கு இடைத்தரகர் கம்பெனிகள் கொள்ளையடிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் துணை போயிருப்பது ஏன் என்ற கேள்வி எழுவதோடு, அந்தக் கொள்ளையில் மத்திய, மாநில அரசுகளுக்கு பங்கு உள்ளதா என்ற பொது மக்களின் சந்தேகங்களுக்கு தமிழக அரசும், மத்திய அரசும் விளக்கிட வேண்டும்.

உலகையே அச்சுறுத்திக் கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றினை பரிசோதிப்பதற்காக சீனாவிலுள்ள வோன்போ பயோடெக் என்ற கம்பெனியிடமிருந்து இந்தியாவில் செயல்படக்கூடிய மேட்ரிக்ஸ் லேப்ஸ் என்கிற கம்பெனி மேற்கூறிய கருவி ஒன்றுக்கு ரூ.225 என்ற அடிப்படையில் இறக்குமதி செய்து, அதே கருவியை ரியல் மெட்டபாலிக்ஸ் மற்றும் ஆர்க் பார்மாசூட்டிகல்ஸ் ஆகிய கம்பெனிகளுக்கு ரூ.400க்கு விற்று, இந்த இரு கம்பெனிகளும் மேற்கூறிய அதே கருவியை 600 ரூபாய்க்கு ஐசிஎம்ஆர்-க்கு (ICMR) விற்றுள்ளன. அதாவது, 225 ரூபாய் விலையுள்ள ஒரு கருவியை 600 ரூபாய்க்கு ஐசிஎம்ஆர் வாங்கியுள்ளது. 

இதேபோன்று, தமிழக அரசும் மேற்கண்ட கம்பெனிகளிடமிருந்து 50 ஆயிரம் கருவிகள் வாங்கியுள்ளது. ஐசிஎம்ஆரும் தமிழக அரசும் இவ்வாறு இடைத்தரகர்கள் கம்பெனிகள் மூலம் வாங்காமல் நேரடியாக வோன்போ பயோடெக் நிறுவனத்திடமிருந்து வாங்கியிருந்தால் ஒரு சோதனைக் கருவியை ரூ.225 விலைக்கு வாங்கியிருக்க முடியும். இதன் மூலம் ஒவ்வொரு கருவிக்கும் கூடுதல் விலை ரூ.375- ஐ தவிர்த்திருக்க முடியும்.

மத்திய அரசு நிறுவனமான ஐசிஎம்ஆரும் தமிழக அரசும் இவ்வாறு கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய, அதுவும் இடைத்தரகர்கள் கம்பெனிகள் மூலம் வாங்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? என்கிற கேள்வி எழுகிறது. இதில் பெரும் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.

மேலும், உயிர்காக்கும் சோதனைக் கருவிகள் விற்பதிலும் கூட இடைத்தரகர்கள் கம்பெனிகள் கொள்ளை லாபமடிப்பதை தில்லி உயர்நீதிமன்றம் அழுத்தமாக சுட்டிக் காட்டியதுடன், எதிர்காலத்தில் இச்சோதனைக் கருவிகளை ஜிஎஸ்டி உள்பட ரூ.400-க்கு விற்க வேண்டுமென கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் கொரோனா தடுப்புக்கருவிகள் மற்றும் உபகரணங்களை வாங்குவதில் மத்திய, மாநில அரசுகள் வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டுமென வற்புறுத்துவதோடு, ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கியதில் உள்ள மர்ம முடிச்சுகளை மத்திய அரசும், தமிழக அரசும் மக்களுக்கு விளக்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;