internet

img

கணினிக்கதிர்:தொழில்நுட்ப புரட்சியா? போதையா?

புதிய நுட்பங்கள் வரும்போதெல்லாம் இப்போது வந்துவிடும் இன்னும் சில காலத்தில் கிடைத்துவிடும் என்று பேசிப்பேசி ஓய்ந்துபோகும் நேரம் அந்தத் தொழில்நுட்பம் நம் பயன்பாட்டிற்கு வந்துசேரும். அதற்குள் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் அறிமுகம் என்ற செய்திகள் வரத்தொடங்கும். அதில் அவ்வளவு வசதியாம், இதில் இல்லாததெல்லாம் அதில் கிடைக்கும் என்றும் பல புனைவுகள் சேர்த்து சொல்லப்படும்.

இதற்கு உதாரணங்கள் பல இருக்கின்றன. ஓர் அலைபேசி நிறுவனம் அலைக்கற்றையை ஏலம் எடுத்து 6 மாதத்திற்கு பிறகுதான் முதல் சேவையை ஏதோ ஒரு மெட்ரோ சிட்டியில் தொடங்கும். அப்புறம் படிப்படியாக விரிவுபடுத்தி கடைக்கோடியில் நம் கைக்கு வந்து சேரும்போது ஆண்டுகள் சில கடந்துபோயிருக்கும். ஆனால், ஏலம் விடுவதில் தொடங்கி சேவை தொடங்குவதற்குள் செய்திகளாக வந்து விழும் தகவல்கள் நமக்கு நாளைக்கே (?) இணைப்புக் கொடுத்து விடுவார்கள் என்பது போன்ற ரகமாய் இருக்கும். இப்படிக் காத்திருந்து காத்திருந்து ஒரு நாள் நமக்குக் கிடைக்கும்போது, “இதெல்லாம் வேலைக்காகாது, புதுசா ஃபோன் வாங்கனும், அப்போதான் வேலை செய்யும்” என்று சொல்வார்கள். கையில் பல நாளாய் பொத்திப் பொத்தி பாதுகாத்து வைத்திருக்கும் ஃபோனுக்கும், நம் பையில் வைத்திருக்கும் பணத்திற்கும் செலவு வைக்கும். கடந்த காலங்களில் 3ஜி வந்தபோதும், அதற்குப்பிறகு வந்த 4ஜியும் நம் ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட அனுபவங்களைத் தந்திருக்கின்றன. தற்போது உலாவரும் 5ஜி ஃபோன்கள், சேவைகள் குறித்த ​செய்திகளும் அந்த ரகம்தான். (5ஜி சேவை தொடங்கும் என்பதற்கான எந்த அறிகுறியும் இந்தியாவில் தற்போதைக்கு தெரியவில்லை. அதில் முதலீடு செய்வதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இன்று வரை தயக்கத்துடன்தான் உள்ளன.) 

ஒரு வசதியைப் பற்றியோ அதைத் தரும் சாதனத்தைப் பற்றியோ உற்சாகமாகப் பேசிவிட்டு தூங்கி மறுநாள் எழுந்தால் அதைவிட சிறப்பானது என்று மற்றொன்று அறிமுகமாகிவிடுகிறது. இந்தத் தொழில்நுட்ப சுனாமியால் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் வரும் வசதிகளும், சாதனங்களும், நம்மை பரபரப்பான நிலையிலேயே வைத்திருக்கின்றன. நம்மைச் சுற்றி இணையம் வழியாக, தொலைக்காட்சி வாயிலாக பரபரப்பான தகவல்களாக வெளியிடப்பட்டு, நமக்கு தொழில்நுட்ப போதை ஊட்டப்பட்டு - அதே போதையில் நம்மை வைத்திருக்கின்றன அந்நிறுவனங்கள். எந்த தயாரிப்பு நிறுவனமும் நேற்று முடிவெடுத்து இன்று எந்த சாதனத்தையும் அறிமுகம் செய்வதில்லை. அப்படி செய்யவும் முடியாது. இதற்கான திட்டமிடலுக்கும் தயாரிப்பிற்கும் போதுமான கால அவகாசம் தேவை.

உங்களுக்கு என்ன தரவேண்டும் என்பதை குறைந்தது 6 மாதங்களுக்கு முன்பே அவர்கள் தீர்மானித்து அதற்கான செயல்திட்டங்களை வகுக்கிறார்கள். அதற்கேற்ப செய்திகளை சிறுகச்சிறுக ஊடகங்கள் வழியாக உங்களுக்கு கிடைக்கும்படியாக கசிய விடுகிறார்கள். இந்த செய்திகளைப் பற்றி சமூக வலைத்தளங்கள் வழியாக விவாதப் பொருளாக்குகிறார்கள். அந்தப் பொருள் இல்லையென்றால் நீங்கள் வாழ்வதே வீண் என்பது போன்ற மனநிலையை உருவாக்கும் உளவியல் வியூகங்கள் கட்டமைக்கப்படுகின்றன. தொழில்நுட்பம் என்றாலே அது இளைஞர்களுக்கானது என்பது போன்ற தோற்றமும் கட்டமைக்கப்பட்டுள்ளது. அது அவர்களை மேலும் மேலும் இந்த போதைக்குள் சிக்க வைக்கிறது.5ஜி சேவையே இல்லாத நாட்டில் 5ஜி ஃபோன் விற்பனையால் என்ன பயன். அதுபோலத்தான் இன்று தொலைக்காட்சி, கணினி, செல்போன்கள் போன்ற சாதனங்கள் மட்டுமல்லாமல் இணைய சேவைகளான வாட்ஸ்அப், டிக்டாக், ஃபேஸ்புக் போன்ற இணைய வசதிகளையும் தேவைக்கு பயன்படுத்தாமல் அதுவே உலகம் என்ற மனநிலைக்கு ஆட்பட்டு - அடிமையாக்கப் படுகிறோம். செல்போன் கையில் இல்லாமல், ஃபேஸ்புக் பார்க்காமல், வாட்ஸ்அப் சேட் செய்யாமல் ஒரு நாளை நகர்த்துவதற்கு சிரமப்படும் மனநிலையில் இன்று பலர் இருக்கிறார்கள். ஃபோனில் சார்ஜ் தீர்வது என்ற இயல்பான ஒரு நிகழ்வைக்கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் மற்றவர்கள் மீது எரிந்து விழக்கூடிய, போதையின் உச்சத்தில் இருப்பவர்களும் நம்முடன் வாழ்வதை சம காலத்தில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.

இவர்களெல்லாம் தொழில்நுட்ப சாதனங்களும் அவை தருகின்ற வசதிகளின் மீதான போதை என்பது நமக்கு எந்த விதத்திலும் பெரிய பலன்களைக் கொண்டு வந்து தருவதில்லை என்ற நிதர்சனமான உண்மையை உணர்ந்து அதற்கேற்ப வாழப் பழகிக் கொள்ளவேண்டும். ஒரு பொருளை வாங்குவதற்கான அறிவிப்பு அல்லது ஒரு சேவையை பயன்படுத்துவதற்கான தேவை என்பது நாம் நமக்கானதாகக் கருதாமல் மற்றொருவருக்கு எந்த விதத்தில் அது பயன்தரக்கூடும், அதனால் நன்மைகள் உண்டா? தீமைகள் உண்டா? என்று வெளியிலிருந்து யோசிக்கத் தொடங்க வேண்டும். தொழில்நுட்ப சாதனங்கள் மூலமாகவும், இணைய சேவைகள் மூலமாகவும் பொழுதுபோக்கி இழக்கும் நேரம் அதிகரிப்பது தனி நபரை மட்டுமல்ல சமூகத்தின் வளர்ச்சியையும் பாதிக்கக்கூடியது என்பதை சுயமாக பரிசீலனை செய்து உணரவேண்டிய தேவை நம் ஒவ்வொருவருக்கும் இன்றைய சூழலில் தேவையாக இருக்கிறது.

====என்.ராஜேந்திரன்====