internet

img

அமெரிக்க நிதி நிறுவனம் மூலமாக 10.6 கோடி மக்களின் தகவல்கள் திருட்டு

அமெரிக்க நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து 10.6 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் ’கேபிடல் ஒன்’ என்னும் நிதி நிறுவனம் கிரெடிட் கார்டு, கடன்கள், வங்கி மற்றும் சேமிப்பு கணக்குகள் தொடர்பான சேவைகளை வழங்கி வருகின்றது. இங்கு அமெரிக்கா மற்றும் கனடாவை சேர்ந்த 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், கிரெடிட் கார்டு வாங்குவதற்கு பதிவு செய்த நபர்களின் பெயர்கள், பிறந்த தேதி, க்ரேடிட் ஸ்கோர் அளவு, மீதமுள்ள தொகை, பொருட்களுக்கு பணம் செலுத்திய தகவல் மற்றும் தொடர்பு எண்ணங்கள் ஆகியவை திருடப்பட்டுள்ளது. இந்த தகவல் திருட்டால் அமெரிக்காவில் 10 கோடி பேரும், கனடாவில் 6 மில்லியன் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவல் திருட்டு தொடர்பாக சீட்டல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் மென்பொறியாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பேஜ் தாம்ஸன் (33 வயது) என்ற அந்த நபர், கம்ப்யூட்டர் மோசடி மற்றும் தாக்குதல் குற்றத்தில் திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 1-ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இவருக்கு அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் சிறை தண்டனையும், இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் ஜூலை 19-ஆம் தேதியன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்த அறிவிப்பு, ஹேக் செய்ததாக கூறப்படும் நபரை திங்களன்று கைது செய்தபின் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.