தேசிய பங்கு சந்தை முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் செயலாக்க அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியம் நேற்றிரவு சென்னையில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தேசிய பங்கு சந்தையின்(என்எஸ்இ) நிர்வாக இயக்குனராக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணா பணியாற்றி வந்தார்.
அப்போது இவர், இமயமலையில் இருக்கும் சாமியார் ஒருவரிடம் கலந்தாலோசித்து பங்கு சந்தை தொடர்பான முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும், ரகசிய தகவல்களை அவருக்குப் பகிர்ந்ததாகவும் இந்திய பங்கு சந்தைகளின் ஒழுங்காற்று அமைப்பான செபி தெரிவித்துள்ளது.
மேலும் அந்த சாமியாரின் பரிந்துரையின் பேரில் சித்ரா ராமகிருஷ்ணா பங்கு சந்தை விதிமுறைகளை மீறி, ஆனந்த் சுப்பரமணியன் என்பவரை தனது ஆலோசகராகவும், குழு செயல்பாடு கண்காணிப்பு அதிகாரியாகவும் ரூ.1.68 கோடி சம்பளத்தில் நியமித்ததாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக செபி நடத்திய விசாரணையில், சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும் ஆனந்த் சுப்பிரமணியன், தேசிய பங்கு சந்தையின் இன்னொரு முன்னாள் தலைவர் ரவி நாராயண் ஆகியோருக்கு தலா ரூ.2 கோடி அபராதமும், தேசிய பங்கு சந்தை தலைமை குறைதீர்ப்பு அதிகாரி வி.ஆர்.நரசிம்மனுக்கு ரூ.6 லட்சம் அபராதமும் செபி விதிக்கப்பட்டது.
அதனைதொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் பிப்.18 ஆம் தேதி வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் சித்ரா ராமகிருஷ்ணா வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க சிபிஐ சார்பில் லுக்அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தேசிய பங்கு சந்தை முறைகேடு தொடர்பாக ஆனந்த் சுப்பிரமணியனை சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு (பிப்.24) சென்னையில் வைத்து கைது செய்தனர்.