india

img

அனைத்துப்பிரிவு மக்களுக்கும் எதிராக வெறித்தனத்துடன் செயல்படும் பாசிச சக்திகள்... தோழர் மகேந்திர சிங் அஞ்சலி கூட்டத்தில் யெச்சூரி பேச்சு.....

மும்பை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், மும்பை மாவட்டக்குழு உறுப்பினரும்  தத்துவமேதையும், வழிகாட்டியுமான தோழர் மகேந்திர சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் கூட்டம் மும்பையில் ஆதார்ஷ் வித்யாலயாவில் ஜூலை 23 அன்று நடைபெற்றது.

அன்றையதினம் வேலைநாளாக இருந்த போதிலும், மழை கடுமையாகப் பெய்து கொண்டிருந்தபோதிலும் அனைத்தையும் மீறி கூட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றார்கள். கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக மும்பை மாநகரில் நடைபெற்ற பெண்களின் அனைத்து இயக்கங்களுக்கும் வழிகாட்டி ஆதரவு அளித்த மாபெரும் தலைவரான தோழர் மகேந்திரசிங்கிற்கு அன்று நடைபெற்றக் கூட்டத்தில் பெண்கள் அதிக அளவில் கலந்துகொண்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை.கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் கவிதையை தோழர் தபதி முகோபாத்யாயா வங்கத்தில் பாட, அதனைத் தொடர்ந்து அவருடைய மாணவி சாக்சி இந்தியில் பாடியதைத் தொடர்ந்து கூட்டம் துவங்கியது.

அதன்பின்னர் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்  பிரகாஷ் காரத், எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, ஹன்னன்முல்லா, பிருந்தா காரத், தபன்சென், சுபாஷினி அலி,எம்.ஏ.பேபி, முகமது சலீம் மற்றும் சிஐடியுஅகில இந்திய தலைவர் கே.ஹேமலதா ஆகியோர் இரங்கல் தெரிவித்து அனுப்பியிருந்த காணொலி கூட்டத்தில் ஒளிபரப்பப்பட்டது.அஞ்சலிக் கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பல் பாசு ஆகியோரும் நேரில் வந்திருந்தனர். தோழர் மகேந்திர சிங்கின்  மனைவி சாவித்திரி சிங்கும் பங்கேற்றார்.அஞ்சலிக் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:தோழர் மகேந்திரசிங் மறைவு இன்றையதினம் எல்லோராலும் மிகவும் ஆழமானமுறையில் உணரப்படுகிறது. நான் எப்போதுமும்பை வந்தாலும் அவர் என்னிடம் எப்போதுவந்தாய்? எங்கேயிருக்கிறாய் என்று கேட்டுஓடோடி வருவார். இதேபோன்று தலைவர்கள்எவர் வந்தாலும் அவர் வந்துவிடுவார்.மிகவும் நெருக்கடியான காலத்தில் தோழர் மகேந்திர சிங் நம்மை விட்டுப்பிரிந்து சென்றுவிட்டார். பாசிச சக்திகள் நம் விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், சமூகத்தின்அனைத்துப்பிரிவு மக்களுக்கும் எதிராகவெறித்தனத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில் தோழர் மகேந்திர சிங் நம்மைவிட்டுப் பிரிந்துசென்றிருக்கிறார். நாடு இப்போது கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்று, பெகாசஸ் வேவு பிரச்சனை, மக்கள் விரோத மத்திய விஷ்டாதிட்டம், நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் அரித்துவீழ்த்தப்படுதல், ஜனநாயகத்தின் பல்வேறு மாண்புகளும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய சமயத்தில் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறார்.

இந்தியாவின் வரலாற்றில் இதற்குமுன் ஆட்சி செய்த எந்தவொரு ஆட்சியாளருமே தான் இருக்கும் மாநகரை அழித்துவிட்டு, வேறொன்றைக் கட்டியதில்லை. ஆனால் இதேபோன்ற காரியத்தில் ஈடுபட்டிருக்கும் முதல் நபர் நரேந்திர மோடியாகும். இவர்இப்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தை, ராஜபாதையை, அவற்றைச்சுற்றியுள்ள பகுதிகளை அழித்துவிட்டு, புதிய சென்ட்ரல்விஷ்டா கட்டிடத்தைக் கட்டிக்கொண்டிருக்கிறார். தோழர் மகேந்திரசிங்கிற்கு நாம் அளித்திடும் உண்மையான அஞ்சலி என்பது, அவர்உயர்த்திப்பிடித்த புரட்சிகர இலக்குகளைஎய்திட நம் உறுதியை இரட்டிப்பாக்கிக்கொள்வதேயாகும்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.இக்கூட்டத்திற்கு மாநிலச் செயலாளர்நரசய்யா ஆதாம் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் அசோக் தாவ்லே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே உட்பட பலர் இக்கூட்டத்தில் அஞ்சலி உரையாற்றினர்.         (ந.நி.)

;