ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், புல்வாமா தாக்குதல் குறித்து முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மோடி அரசு பதிலளிக்காமல் சிபிஐ-யை அவர் மீது ஏவி விடுகிறது என்று சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
தி வயர் இணைய செய்திக்கு நிறுவனத்திற்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் அளித்த நேர்காணலில், கடந்த 2019-ஆம் ஆண்டில், புல்வாமா தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர், ராணுவ வீரர்களை அழைத்து செல்வதற்கு சி.ஆர்.பி.எஃப் சார்பில் உள்துறை அமைச்சகத்திடம் விமானம் கேட்டபோது, உள்துறை அமைச்சகம் அதற்கு அனுமதி வழங்காததால்தான், வீரர்கள் சாலை வழியாக சென்றார்கள்; வீரர்கள் சென்ற பாதையிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படவில்லை; இதன் விளைவாக, புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்த பிறகு, உள்துறை அமைச்சகத்தின் அலட்சியத்தால் தான் புல்வாமா தாக்குதல் நடந்தது என்பதை பிரதமர் மோடியிடம் கூறியபோது, இதைப் பற்றி பொதுவெளியில் பேச வேண்டாம் என்று மோடி கூறியதாக சத்யபால் மாலிக் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே, பாஜகவை எதிர்க்கும் எதிர்க்கட்சி தலைவர்களை சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை கொண்டு குறிவைப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழும் நிலையில், தற்போது ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க கோரி ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர் ராம் மாதவ் தன்னை வற்புறுத்தியதாக சத்யபால் மாலிக் கூறியதற்கு, சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புல்வாமா தாக்குதல் குறித்து முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மோடி அரசு பதிலளிக்காமல் சிபிஐ-யை அவர் மீது ஏவி விடுகிறது என்று சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது, "இந்திய ஜனநாயகத்தின் மீது இது மோசமான தாக்குதல். நமது தேசத்தின் பாதுகாப்பை முதன்மையாக கருதி சத்யபால் மலிக் எழுப்பிய பிரச்சனைகளுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக மோடி அரசாங்கம் சிபிஐ-யை ஏவி விட்டுள்ளது. இது எதிர்பார்த்த ஒன்றுதான்! இது வெட்கக்கேடானது! மிகவும் கண்டிக்கத்தக்கது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.