ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து நாடாளுமன்ற வாயிலில் தமிழ்நாடு எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மக்களவையில் நேற்று, பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி வழங்கப்படாமல் இருப்பது குறித்து தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழக அரசை பொறுத்த வரை, அவர்கள் தமிழக மாணவர்கள் விஷயத்தில் பொறுப்பாக இல்லை; நேர்மையாக இல்லை; ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை; அவர்கள் நல்ல நாகரிகத்தை கொண்டிருக்கவில்லை. மொழியை வைத்துக்கொண்டு அவர்கள் விளையாடுகிறார்கள். அவர்கள் மாணவர்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள்” என்று பதிலளித்தார்.
இதற்கு தமிழ்நாடு எம்.பி-க்கள் கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். ஒன்றிய கல்வித்துறை அமைச்சரை கண்டித்து 2 ஆவது நாளாக நாடாளுமன்ற வாயிலில் தமிழ்நாடு எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். “தர்மேந்திர பிரதானே மன்னிப்புக் கேள்” என்று முழக்கங்களை எழுப்பினர்.