india

img

தற்கொலைகள் நகைப்புக்குரியது அல்ல! - சீத்தாராம் யெச்சூரி

தற்கொலைகள் நகைப்புக்குரியது அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில், ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'ஒரு பேராசிரியரின் மகள் ‘வாழ விரும்பவில்லை காங்காரியா ஏரியில் குதித்து  சாகப் போகிறேன்’ என்று எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அடுத்த நாள் அந்த கடிதத்தை பார்த்த பேராசிரியர் ‘இத்தனை வருடங்கள் அவளுக்கு எடுத்துக் கூறியும் இப்போதும் காங்காரியா ஏரியின் பெயரை தவறாக எழுதியிருக்கிறாள்' என்று கோபப்பட்டதாகவும் ‘ஜோக்’ அடித்திருக்கிறார். அதனை சிரித்து அங்கீகரித்துள்ளனர் அர்னாப் கோஸ்வாமியும் அவரது ஊடக ஊழியர்களும். இந்த நிலையில், மோடியின் இத்தகைய பேச்சுக்கு சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: "மோடியின் இத்தகைய பேச்சு சிறிது கூட பொறுப்பற்ற செயல். தற்கொலைகள் நகைச்சுவைக்குரியது அல்ல! 

தேசிய குற்றவியல் ஆணையத்தின் படி, 2021-ஆம் ஆண்டு 1,64,033 பேர் அதாவது ஒரு நாளைக்கு 450 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 34.5% பேர் 18-30 வயதுடையவர்கள். 31% பேர் 30-45 வயது! இந்தியாவின் இளமைத்தன்மை அழிகிறது. இது எப்படி நகைச்சுவையாக இருக்க இயலும்?" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.