இந்தியாவில் ஏதோ ஒன்று பெரிதாக நடக்கப் போவதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
பெரு நிறுவனங்களில் உள்ள நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்யும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஹிண்டன்பர்க் நிறுவனம், கடந்தாண்டு அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டது. அதானி குழுமமானது, ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவிற்கு பங்குச் சந்தை முறைகேடு செய்திருக்கிறது; அதானி, தனது குடும்ப உறவினர்கள் மூலம் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி, வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளார்; அதிகப்படியான வரிச்சலுகை கொண்ட வெளிநாடுகளில் பணத்தை முறை யற்ற வகையில் முதலீடு செய்து அமெரிக்கப் பத்திரம் மற்றும் இந்தியர் அல்லாத வர்த்தகப் பத்திரம் மூலம் நிறுவனத்தில் ஷார்ட் பொசிஷன் (Short Position) என்ற நிலையில் வைத்து, தனது நிறுவனங்களின் பங்கு மதிப்பை மோசடியாக உயர்த்திக் காட்டியுள்ளார். 3 ஆண்டுகளில் அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 நிறுவனங்களின் பங்குமதிப்பு 819 சதவிகிதம் உயர்ந்துள்ளது” என்று கூறி, அதுதொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டது. இதை தொடர்ந்து அதானி குழுமத்திற்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் ஏதோ ஒன்று பெரிதாக நடக்கப் போவதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.