india

img

பிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்களின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

முறைகேட்டில் சிக்கியுள்ள பிஎம்சி வங்கியில் இருந்து பணம் எடுக்க ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி வாடிக்கையாளர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

மும்பையில் பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கி கடன் வழங்கியதில், ரூ.4,355 கோடி முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்த நிலையில், வங்கியின் செயல்பாடுகளை தணிக்கை செய்யவும், புதிய கடன் மற்றும் சேமிப்பு திரட்டுவதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்தது. வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக வாடிக்கையாளர் 40 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுக்க ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும், வங்கி வாடிக்கையாளர்கள் இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 

;