திருப்பதி விவகாரத்தில் முறையான ஆதாரம் இல்லாமல் அவசரமாக பொதுவெளியில் குற்றச்சாட்டை முன்வைத்தது ஏன் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்க சிறப்புக் குழு ஒன்றை ஆந்திர அரசு அமைத்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி பாஜக-வை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மாநிலங்களவை எம்.பி ஒய்.வி.சுப்பாரெட்டி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, லட்டு விவகாரத்தில் முறையான ஆதாரம் இல்லாமல் அவசரமாக பொதுவெளியில் குற்றச்சாட்டை முன்வைத்தது ஏன்? என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இவ்விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது குறித்து ஒன்றிய அரசின் கருத்தைக் கேட்டு, விசாரணையை அக்டோபர் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.