india

img

சத்யபால் மாலிக் நேர்காணல் மோடி அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதுதில்லி, ஏப்.17- ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக், பாதுகாப்புப்படையினர் 40 பேர் உயிரிழப்பு தொடர்பாக அளித்துள்ள நேர்காணல் குறித்து, மோடி அரசாங்கம் பதில் கூற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாகக் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரியிருப்பதாவது: புல்வாமா பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பந்தமாகவும் அதில் 40 துணை பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தது சம்பந்தமாகவும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் வெளியிட்டுள்ள விவரங்கள் நம் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான ஆழமான விஷயமாகும். நாட்டின் பாதுகாப்பில் குறைகள் இருப்பதை அனுமதித்திட முடியாது.

அரசமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35-எ பிரிவுகள் ரத்து செய்யப்பட்ட விதம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கலைக்கப்பட்டு இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட விதமும் இதேபோன்று ஆழமான விஷயங்களேயாகும்.

மோடி அரசாங்கம் இந்தப் பிரச்சனைகளில் எதுவும் கூறாதிருப்பது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றின் மீது மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திடும். நாட்டின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் அரசமைப்புச்சட்டத்தின் புனிதம் ஆகியவற்றின் நலன் கருதி, இந்தக் குற்றச்சாட்டுகள் மீது மோடி அரசாங்கம் பதிலளித்திட வேண்டும். எதுவும் கூறாத மவுனமாக இருந்திடக் கூடாது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கோரியுள்ளது.