மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களுக்கு தடை செய்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இன்றைய காலக்கட்டத்தில் எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள் தான் அதிகளவில் இடம் பெறுகின்றன. இது நுகர்வோரின் ஆசையை தூண்டி சம்பந்தப்பட்ட பொருள் உட்பட அனைத்திலும் நம்மை அடிமையாக்கி விடுகிறது.
தவறான விளம்பரங்களை தடுத்தல் மற்றும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களுக்கான ஒப்புதல்கள், 2022 பெயரில் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளில், தள்ளுபடிகள் மற்றும் இலவச உரிமை கோரல்களை வழங்கும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் விளம்பரங்களுக்கு கடுமையான விதிமுறைகளை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாக கொண்டு, தவறாக வழிகாட்டும் விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதை தடை செய்ய, வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆதாரம் இல்லாத உரிமை கோரல்கள், மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளை அளித்தல், தவறான தகவல்களை அளித்தல் போன்றவற்றால் நுகர்வோர் ஏமாற்றப்படாமல் இருப்பதை இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உறுதி செய்கின்றன.
விதிகளை மீறுவோருக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தவறு செய்வோருக்கு 50 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையிலும் 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்கும் வகையிலும் வரையறுக்கப்பட்டுள்ளது.