புதுதில்லி, ஜன. 25 - இந்திய நாட்டின் 75-ஆவது குடியரசு தினம் ஜனவரி 26 வெள்ளியன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசுத் தினத்தில் தில்லியில் உள்ள கடமைப் பாதையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்த உள்ளார்.
தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொள்ளும் அவர், மாநில அரசுகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்பையும் பார்வையிடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விழாவில் பங்கேற்கின்றனர்.
இவ்வாண்டு, குடியரசு தின சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பங்கேற்கிறார். முன்னதாக, வியாழனன்று இவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் முர்மு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
அதில், “அரசியல் அமைப்பை உருவாக்க பங்களித்தவர்களுக்கு இன்று நாம் மரியாதை செலுத்துவோம். நாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை வழங்கிய அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்” என்று தெரிவித்த குடியரசுத் தலைவர், “அமிர்த காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் இந்தியா உள்ளது. நமது இலக்குகளை அடைய ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானதாக இருக்கும். ராமர் கோவில் மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல.
நீதித்துறை செயல்பாட்டின் நம்பிக்கைக்கும் சான்று. நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல நமக்கு பொன்னான வாய்ப்புகள் உள்ளன. அமிர்த காலம் இதுவரை இல்லாத தொழில்நுட்ப மாற்றங்களின் காலமாகவும் இருக்கும்” என்றும் குறிப்பிட்டார்.