பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் கணினிகளில் எப்படி ஆபத்தான தகவல்கள் திணிக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.
பீமா கோரேகான் வழக்கில், கடந்த 2018ம் ஆண்டு ஸ்டான் சுவாமி, ஆனந்த் டெல்டும்டே, கௌதம் நவ்லகா, கவிஞர் வரவரராவ், சுதாபரத்வாஜ், கன்சால்வஸ் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது வரை பலர் சிறையில் உள்ளனர். இதற்கிடையில் மகாராஷ்டிரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்டான் சுவாமி, பாரிச வாயு நோயால் கடும் பாதிப்புக்கு நிலையிலும், அவருக்கான அடிப்படை உரிமையை நீதிமன்றம் மறுத்தது. இதையடுத்து உரிய சிகிச்சை இன்றி அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இந்நிலையில் 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான ஸ்டான் சுவாமியின் கணினியை ஆய்வு செய்ததன் அடிப்படையில் மாவோயிஸ்ட்களால் எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதங்கள் உட்பட 44 ஆவணங்கள் ஹேக்கர்களால் திணிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க தடயவியல் நிறுவனமான ஆர்செனல் கன்சல்டிங் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், சமூக ஆர்வலர்கள் ரோனாவில்சன் கணினியில் இதுபோன்ற ஆவணங்கள் உட்செலுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், "ஆபத்தான தொழில்நுட்பம் மற்றும் நச்சு மென்பொருள் மூலம் வஞ்சகமாக
கணினிகளில் தகவல்கள் திணிப்பு. இதன் மூலம் இன்று பீமாகொரேகான் கைதுகள். நாளை இந்த ஆட்சியை விமர்சிக்கும் எவரும் இது போன்ற கொடூரமான செயலுக்கு இலக்காகலாம். பீமாகொரேகான் வழக்குகளில் கைதானவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என சி.பி.எம் கோருகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் பிணை அல்லது விடுதலையை என்.ஐ.ஏ எதிர்க்க கூடாது. இவர்களின் கணினிகளில் எப்படி ஆபத்தான தகவல்கள் திணிக்கப்பட்டன என்பதை நிபுணர் குழு மூலம் முழுமையாக ஆய்வு செய்து குறிப்பிட்ட கால வரம்புக்குள் அறிக்கை வெளியிட வேண்டும்" என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.