india

img

சாலையோர உணவகங்களில் பெயர்ப்பலகை

வடமாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை – ஆகஸ்ட் கன்வார் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்து வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வருவதே கன்வார் யாத்திரை ஆகும். இந்த ஆண்டின் கன்வார் யாத்திரைக்கு செல்லும் பாதைகளில் பெயர்ப் பலகையுடன் உணவுப் பொருள் கடை  வைக்க வேண்டும் என்றும், இறைச்சிக் கடை வைக்கக் கூடாது என பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநில அரசு உத்தரவிட்டது. தொட ர்ந்து உத்தரகண்ட், மத்தியப்பிரதேச அரசுகளும் அதே உத்தரவை பிறப்பித்தன. 

இந்த சர்ச்சைக்குரிய உத்தரவு முஸ்லிம் மக்களுக்கு மற்றும் அரசி யலமைப்புக்கு எதிரானது என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. 

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜன சக்தி உள்ளிட்ட பாஜக கூட்டணி கட்சி களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் கன்வார் யாத்திரை உத்தரவை எதிர்த்து, சிவில் உரிமை கள் பாதுகாப்பு சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்ச  நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், எஸ்.வி.என் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது ​​மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி,  “எந்த சட்ட அதிகாரமும் இல்லாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. அந்தப் பகுதியில் இருப்பவர்கள் இந்த உத்தரவை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்த கடைகளில் பெரும்பாலானவை டீக்கடைகள், சில பழக்கடைகள். இந்த உத்தரவு உரிமையாளர்களுக்கு பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும். இதன்மூலம் அப்பட்டமான அடை யாளப்படுத்தும் அரசியல் முன்வைக்கப்படுகிறது. குடியரசு நாட்டில் இதை செயல்படுத்த முடி யாது. தற்போதுவரை அனைத்து மதத் தினரும் யாத்திரைக்கு வருபவர் களுக்கு எந்த பேதமும் இல்லாமல் உதவிவருகிறார்கள். பொருள்களின் பெயர்களுடன், உரிமையாளரின் பெயரையும் எழுதுவதற்கு உத்தர விடும் பின்னணியில் இருக்கும் நோக்கம் என்னவாக இருக்க முடி யும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், பெயர்ப் பலகை உத்தரவுக்கு தற்காலிக தடை பிறப்பித்து, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மத்தியப் பிரதேச அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.