india

img

சரண் சிங்கிற்கு திடீர் ‘பாரத ரத்னா’ அறிவிப்பு

பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற 27   எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து “இந்தியா” கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியை கண்டு அஞ்சிய பாஜக மத்திய அமைப்புகளை வைத்து மிரட்டியும், ஊடகங்கள் மூலம் பல்வேறு குழப்ப நிலையை உருவாக்கியும் “இந்தியா” கூட்டணியை துண்டாட பல்வேறு சதி  திட்டங்களை தீட்டி வருகிறது.

நாட்டிலேயே அதிக மக்களவைத் தொகுதியை (80) கொண்ட உத்தரப்பிரதேசத்தின் முக்கிய பிராந்திய கட்சியாக இருக்கும் ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தளத்தை (ஆர்எல்டி) இழுக்க பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. 

ஆனால் 4 நாட்களுக்கு முன் விரும்பிய தொகுதி கள் கிடைக்காததாலும், பாஜக தரும் 2 மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை இடங்களை பெற்று ‘மோடியா’ தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆர்எல்டி இணையப் போவதாகவும் ஊடகங்கள் ஊதின. இந்த ஊடக செய்தி களுக்கு ஆர்எல்டி மாநில தலைவர் ராஜீவ் மாலிக், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், மூத்த தலைவர் சிவ்பால் சிங் ஆகியோர் மறுப்பு தெரிவித்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி  தலைவர் ஓம்  பிரகாஷ் ராஜ்பர் வியாழனன்று, “பிப்ரவரி  12-ஆம் தேதி ஜெயந்த் சவுத்ரி பாஜகவுடன் கைகோர்ப்பார்” என கூறி அடுத்தகட்ட பரபரப்பை  ஏற்படுத்தினார்.

திடீர் பாரத ரத்னா
ஆர்எல்டி கட்சியின் கூட்டணி இணைவு தொடர்பாக பல்வேறு குழப்பங்களுக்கு இடையே வெள்ளியன்று முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி.வி. நரசிம்ம ராவ், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பாரத ரத்னா அறிவிப்பில் இடம்பெற்றுள்ள சரண் சிங் ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரியின் தாத்தா என்ற நிலையில், ஆர்எல்டி-யை இழுக்கவே சரண் சிங்கிற்கு பாரத ரத்னா பாஜக அறிவித்துள்ளது என சர்ச்சை  எழுந்துள்ளது.