கோவிட்-19 வைரஸ் பாதிப்பில் இத்தாலி பின்னுக்கு தள்ளி, இந்தியா 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,50,473 ஆக உயர்ந்துள்ளது. அதே போல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,98,244 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,51,249 ஆக உள்ளது. இந்த நிலையில், கோவிட்-19 வைரஸ் பாதிப்பில் இத்தாலி பின்னுக்கு தள்ளி, இந்தியா 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,36,657 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,887 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 294 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கோவிட்-19 வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,642 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,14,073 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,15,942 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் பரவலாக கோவிட்-19 தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் 80,229 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,849 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து, தமிழகத்தில் 28,694 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 232 பேர் உயிரிழந்துள்ளனர். தில்லியில், 26,334 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 708 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் 19,094 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,190 பேர் உயிரிழந்துள்ளனர்.