india

img

மன்னார் வளைகுடாவில் வெளிர்ந்துவரும் பவளப்பாறைகள்

1998 மற்றும் 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலக அளவில் பவளப்பாறைகள் வெண்மையாகிவருகிறது, அதாவது வெளிர்ந்துபோய்வருகிறது. 

2016- ஆம் ஆண்டு,  தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவட்சன் கடல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில்  16.2 சதவீத பவளப்பாறைகள் இறந்துவிட்டன; மீதமுள்ள பவளப்பாறைகளில், நான்கில் ஒரு பங்கு (23.9 சதவீதம்) வெளுத்துவிட்டன என்பது தெரியவந்துள்ளது.

சுகந்தி தேவட்சன் கடல்சார் ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் 2016 ஆம் ஆண்டு பவளப்பாறை சேதத்தை  ஆய்வு செய்தபோது, ​​மண்டபத்தில் அதிகபட்சமாக பவளப்பாறைகள் வெளிர்ந்திருந்ததும்  உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது.

தண்ணீர் மிகவும் சூடாக இருக்கும்போது பவளப்பாறைகளில்  வெளுப்பு ஏற்படுகிறது, அதாவது பவளப்பாறைகள் அவற்றின் கூட்டுவாழ் இனமான ஆல்காவை - பச்சைப்பாசியை  வெளியேற்றி வெண்மையாக மாறுகிறது. 

 இந்த நிலையில் பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த மன்னார் வளைகுடா கடல் உயிர்க்கோள காப்பகத்தில் பவளப்பாறைகள்  வெளிர்ந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.   மே கடைசி வாரம் மற்றும் ஜூன் முதல் வாரத்திற்கு இடையில் பவளப்பாறைகள் அதிகளவில் வெளிர்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் கோடைவெயில் கொளுத்துவதால் பவளப்பாறைகள் பெருமளவு உயிரிழக்க வாய்ப்புள்ளது என்றும்  எனவே இப்பிரச்சனையில் உரிய கவனம் செலுத்துமாறு தேசியப்பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration) எச்சரித்துள்ளது.

ஆனால், ஏப்ரல் மூன்றாவது வாரத்திலிருந்தே பவளப்பாறைகள் வெளிரத் தொடங்கிவிட்டன என்கிறார் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் இயக்குநர் ஜெகதீஷ் எஸ். பாக்கன். 

இதுகுறித்து ஜெகதீஷ் எஸ்.பாக்கன் கூறுகையில், தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் எச்சரித்துள்ள நிலையில் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தூத்துக்குடியைச் சேர்ந்த சுகந்தி தேவட்சன் கடல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சென்னையை தளமாகக் கொண்ட தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையம் ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்கள் முக்கியமானவை என்றும் கண்காணிப்பு நடந்து வருவதாகவும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், இப்பகுதியில் ஓரளவு நல்ல மழை பெய்தால், வெளிருதல் குறையும். வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்தால் அது பெரும் கவலையை ஏற்படுத்தும். வாரத்திற்கு ஒருமுறை அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நீருக்கடியில் கணக்கெடுப்பைத் தொடர திட்டமிட்டுள்ளோம்.

மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப் பகுதியில் பவளப் பகுதிகளைச் சுற்றியுள்ள கடல் வெப்பநிலையின் பரவலை அறிந்து கொள்ள கடல் சுழற்சி மாதிரியை மேற்கொள்வதில்  நிபுணத்துவம் பெற்றுள்ள நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (சூஊளுஊஆ)-வுடன் இணந்து  ஏப்ரல் முதல் ஜூன் 2024 வரை வெப்பநிலைப் பரவலைக் கண்காணிக்க மோடிஸ் சேட்டிலைட் தரவு பயன்படுத்தப்படும் என அதிகாரியொருவர் தெரிவித்தார்.

 மன்னார் வளைகுடாவில் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 11 தீவுகள் மற்றும் பாக் நீரிணைப்பகுதியில் உள்ள சில பகுதிகளில் முதல்நிலை தகவல்களைப் பெறுவதற்காக விரைவான கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தூத்துக்குடியைச் சேர்ந்த சுகந்தி தேவட்சன் கடல் ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடி, மண்டபம், பாக் நீரிணைப் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், மன்னார் வளைகுடா பகுதியில் 33 டிகிரி செல்சியஸ் வரை வெயில் தாக்கியுள்ளது. இதனால் பவளப்பாறைகள் வெளிரத் தொடங்கியுள்ளன.

 குறிப்பாக, 50 சதவீதம் போரிட்டிஸ் பவளப்பாறைகள் வெளிரத் தொடங்கிவிட்டன. இதில் பத்து சதவீதம் போரிட்டிஸ் பவளப்பாறைகள் முற்றிலுமாக வெளிரிவிட்டது. மற்றவை பகுதிபகுதியாக வெளிரத் தொடங்கியுள்ளன.

அக்ரோபோரா, மாண்டிபோரா மற்றும் போசிலோபோரா போன்ற வேகமாக வளரும் இனங்கள் (கிளைக்கும் பவளப்பாறைகள்) இன்னும் வெளுக்காமல் இருந்தாலும் வெளிர்தலின் ஆரம்ப அறிகுறிகளைக் காட்டுகின்றன என்கிறார் சுகந்தி தேவட்சன் கடல் ஆராய்ச்சி நிறுவன இணைப் பேராசிரியர் திரவியராஜ்.

இந்த மாத தொடக்கத்தில், தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக விஞ்ஞானிகள்- சர்வதேச பவளப்பாறை விஞ்ஞானிகள் கூறுகையில் உலகம் தற்போது நான்காவது உலகளாவிய பவளப்பாறை வெளுப்பை சந்தித்து வருகிறது. 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பவளப்பாறைகள் பெருமளவில் வெளிர்வது குறைந்தது 53 நாடுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.