india

img

திவால் திருத்தச் சட்டத்தில் கார்ப்பரேட் நபர்களைச் சேர்க்காதது ஏன்?

புதுதில்லி, ஆக.2-

திவால் திருத்தச் சட்டமுன்வடிவில் கார்ப்பரேட் நபர்களைச் சேர்க்காதது ஏன் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வியாழன் அன்று மக்களவையில் திவால் சட்டத் திருத்தச் சட்டமுன்வடிவின்மீது பி.ஆர். நடராஜன் பேசியதாவது:

இந்தச் சட்டமுன்வடிவானது கடன் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்த மேற்கொள்ள வேண்டிய நடைமுறை தொடர்பான காலக்கெடு சம்பந்தமாகக் கொண்டுவரப்படுகிறது. திவால் சட்டத்திலேயே இதற்காகப் பெறப்படும் தீர்மானத்திற்குப்பின்னர், இது தொடர்பாக தேசியக் கம்பெனி சட்ட நடுவர் மையம் (NCLT-National Company Law Tribunal) பதினான்கு நாட்களுக்குள் பணம் செலுத்தத்தவறியது தொடர்பாக தீர்மானித்திட வேண்டும் என்கிறது. சராசரியாக, நடுவர் மையம் இதற்கு மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் எடுத்துக் கொள்ளும். என்னைப் பொறுத்தவரை, இந்தச் சட்டத்தின்கீழ் ஒரு காலக்கெடுவை நிர்ணயிப்பதால் உண்மையான பிரச்சனைக்குத் தீர்வு கண்டிட முடியாது என்பதேயாகும். உண்மையான காரணங்களை நாம் அடையாளம் கண்டிட வேண்டும். ஒருவர் திவாலாவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இதற்கான காரணங்கள் அனைத்தையும் முற்றிலுமாக அலசி ஆராயாத நிலையில், இப்போது மேற்கொண்டிருக்கிற நடவடிக்கை வீணாகிவிடும்.

திவால் சட்டத்தில் இரு முக்கியக் கூறுகள் இருக்கின்றன. ஒன்று, கார்ப்பரேட் நிறுவனங்களின் திவால் நிலைமை. மற்றொன்று, கார்ப்பரேட் நபர்களின் திவால் நிலைமை. இதில் ஒரு பகுதியை மட்டும் அறிவித்துவிட்டு, மற்றொரு பகுதியை அறிவிக்காமல் விட்டிருப்பது ஏன் என்று மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.  

இப்போது வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதுதான் திவால் சட்டத்தின்கீழ் வழக்குகள் தொடுக்கின்றன. இச்சட்டத்தின் 60ஆவது பிரிவு, தனிநபர்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடர வேண்டும் என்று கூறுகிறது.  அரசின் இத்தீர்மானத்திட்டத்தின்படி மொத்தக் கடன்களில் 85 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இதுவெற்றிகரமாக நிறைவேறும்பட்சத்தில், கடன் வாங்கிவிட்டுத்திருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட் நபர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது (what would be the liability of a corporate individual) என்று கேட்க விரும்புகிறேன்.

இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார்.

(ந.நி.)