ஆந்திரா மற்றும் தெலுங்கானா மின் வாரியங்களின் இணையதளங்களை மீட்டெடுக்க 6 பிட்காயின்கள் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி அன்று, தெலுங்கானா மின் வாரியத்தின் இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டது. இதனால் இணையதள சேவைகள் முடக்கப்பட்டது. இதனால், ஆந்திராவிலும் மின் வாரியத்தின் இணையதளம் முடக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வியாழன் அன்று, இணையதளங்களை முடக்கிய ஹேக்கர், இணையதளங்களை மீட்டெடுக்கும் விளக்கக் குறிப்பை வழங்க ரூ.23 லட்சம் மதிப்புள்ள மின்னணு பணமான 6 பிட்காயின்களை கேட்டு மிரட்டல் விடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஐதராபாத் சைபர் குற்றப்பிரிவின் கூடுதல் துணை ஆணையர் கே.சி.ஸ்.ரகுவீர் கூறுகையில், ”இணையதளங்களை மீட்டெடுக்க 6 பிட்காயின்களை கோட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். எங்கிருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விசாரணை நடந்து வருகின்றது” என்று தெரிவித்தார்.
இது குறித்து தெலுங்கானா மின்வாரியத்தின் தலைவர் டி.ஸ்ரீநிவாஸ் கூறுகையில், ”எங்கள் இணையதளங்கள் டிசிஎஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. அந்நிறுவனத்தின் வல்லுனர்கள் இணையதளத்தை முழுமையாக மீட்டெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த தகவல்களும் திருடப்படவில்லை. தற்போது, இணையதளங்கள் வழக்கம் போல் இயங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.