புதுதில்லி, மார்ச் 22 - ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை பெரும்பாலான விவசாய சங்கங்கள் ஆதரிக்கின்றன என்று, உச்ச நீதிமன்ற நிபுணர் குழு அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஒன்றிய பாஜக அரசானது, கடந்த 2020-ஆம் ஆண்டு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்தச் சட்டங்கள் விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கவும், விவசாயிகளின் நில உரிமையைப் பறித்து, அவர்களைக் கொத்தடிமையாக்கவும் வழிவகுக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இது ஒருகட்டத்தில் விவசாயத்தையும் அழித்துவிடும் என்றுகூறி, லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியை சுமார் ஓராண்டாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இந்த போராட்டத்தின் முடிவாக, உ.பி.. பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்களும் வந்ததால், பிரதமர் நரேந்திர மோடி தானாகவே 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்ததுடன், விவசாயிகளின் நம்பிக்கையை பெற முடியாமல் போனதற்காக பகிரங்க மன்னிப்பும் கோரினார். இவ்வளவும் நடந்து முடிந்ததற்கு பின்னர்தான், வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவானது, பெரும்பாலான விவசாய சங்கங்கள் 3 வேளாண் சட்டங்களை ஆதரிக்கின்றனர் என்று உச்ச நீதிமன்றத்திடம் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. “ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் குறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு விவசாய சங்கம் உட்பட 266 விவசாய சங்கங்களுடன் எங்கள் குழு ஆலோசனை நடத்தியது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாய சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. மேலும், இதற்கென உருவாக்கப்பட்ட இணையதளம் மூலம் 19,027 கருத்துக்களும் மற்றும் 1,520 இ-மெயில்களும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டன. 3.83 கோடி விவசாயிகளைக் கொண்ட 73 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளிடம் நேரடியாகவும் காணொலிக் காட்சி வாயிலாகவும் உரையாடி கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதில், பெரும்பாலான விவசாய சங்கங்கள் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக இருந்தது தெரியவந்தது. இந்த விவசாய சங்கங்களில் 3.3 கோடி விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட 61 சங்கங்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தன. 51 லட்சம் விவசாயிகளைக் கொண்ட 4 சங்கங்கள் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. 3.6 லட்சம் விவசாயிகளைக் கொண்ட 7 சங்கங்கள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று விரும்பின. தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கங்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் ஆலோசனையில் கலந்து கொள்ளவில்லை” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஷேத்கரி சங்கத்தனா என்ற விவசாய சங்கத் தலைவரும், நிபுணர் குழு உறுப்பினர்களில் ஒருவருமான அனில் கன்வத், பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘‘போராட்டத்தில் ஈடுபட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் தங்கள் வருவாயை அதிகரிக்கும் வாய்ப்பை இழந்து விட்டதாக இப்போது உணர்கின்றனர்” என்று கூறியுள்ளார். மேலும், “3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது ஒன்றிய அரசு செய்த மிகப்பெரிய அரசியல் தவறு” என்றும், “அதனால்தான் பஞ்சாபில் பாஜக மோசமாக தோல்வி அடைந்தது’’ என்றும் கண்டுபிடித்துள்ளார்.