தாஜ்மகால் மற்றும் குதுப்மினாரை இடித்துவிட்டு கோயில் கட்ட வேண்டும் என்று அசாம் மாநில பாஜக எம்.எல்.ஏ ருப்ஜோதி குர்மி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்த முகலாய சாம்ராஜ்யம் தொடர்பான பாடங்களை, வரலாற்றுப் புத்தகத்திலிருந்து நீக்கியுள்ளது. அதேபோல, இந்தி புத்தகத்திலிருந்த உருது கவிதைகளும் நீக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், அசாமில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மரியானி தொகுதி எம்.எல்.ஏ ருப்ஜோதி குர்மி, தாஜ்மகாலையும், குதுப்மினாரையும் உடனடியாக இடித்து தரைமட்டமாக்க வேண்டும். அந்த கட்டிடங்கள் இருந்த இடத்தில் கோயில்களை கட்ட வேண்டும் என்றும் தான் பிரதமர் மோடியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ்காக தாஜ்மகாலை கட்டினார். ஆனால் மும்தாஜ் இறந்த பிறகு எதற்கு 3 முறை திருமணம் செய்துகொண்டார். எனவே, தாஜ்மகாலை காதலின் அடையாளமாக குறிப்பிடக் கூடாது என்று சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். ருப்ஜோதி குர்மியின் இத்தகைய திமிர் பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.