india

img

பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கோரி நாடு முழுதும் ஆர்ப்பாட்டம்

புதுதில்லி, ஏப்.28- பெண் மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல்ரீதியாக கொடுமைகள் புரிந்துவரும் பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்றும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடு முழுதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தலைநகர் புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வீதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மகளிர் தேசிய சம்மேளனம் உட்பட பல்வேறு மகளிர் அமைப்புகள் சார்பில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் பி.கே.ஸ்ரீமதி, பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே, ஜன்வாதி மஹிளா சமிதி தலைவர்கள் ஆஷா ஷர்மா மற்றும் மைமூனா முல்லா முதலானவர்கள் முன்னின்று இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இவர்கள் காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திற்கு நாடாளுமன்ற வீதியிலிருந்து பேரணியாகச் சென்றார்கள். பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். போராட்டத்தில் சென்றவர்கள் காவல்துறையினரால் இடையில் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டார்கள். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இதேபோன்று நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றுள்ளார்கள். பஞ்சாப், ஹர்யானா, குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார், தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், கேரளம், தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம், ஒடிசா, அஸ்ஸாம், மணிப்பூர், திரிபுரா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் உள்ள மாநகரங்களிலும், நகரங்களிலும், கிராமங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

மல்யுத்த வீராங்கனைகள் (இவர்களில் ஒருவர் மைனர்) தங்கள் மீது பாலியல் கொடுமைகள் புரிந்த நபருக்கு எதிராக தில்லி காவல்துறையினரிடம் புகார்கள் அளித்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க மறுத்திருப்பதைக் கண்டு, மல்யுத்த வீராங்கனைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது மாநகரில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்திருப்பதையேச் சித்தரிக்கிறது. மல்யுத்த வீராங்கனைகளால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேர்வழி ஆளும் பாஜக-வைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினராவார். இதனால்தான் பிரதமரும் அவருடைய அரசாங்கமும் இவர்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வளைந்துகொடுத்துக்கொண்டிருக்கிறது. மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம் என்று கூறி வீதியிலேயே அமர்ந்து, உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

விளையாட்டுத்துறையில் ஏற்பட்டுள்ள மோசமான தோல்விக்குப் பொறுப்பேற்று ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் அனுராக் தாகூர் உடனடியாக ராஜினாமா செய்திட வேண்டும். மல்யுத்த வீராங்கனைகள் அளித்துள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றம் புரிந்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

குற்றம் புரிந்த கயவர்கள் குறித்து புகார்கள் அளித்த மல்யுத்த வீராங்கனைகளின் அடையாளங்களை தில்லி, கன்னாட் பிளேஸ் காவல் நிலைய அதிகாரிகள், கிரிமினல் மஃபியா கூட்டத்தினரிடம் வெளிப்படுத்தியிருப்பதால், அந்தக் குண்டர் கும்பல் மேற்படி வீராங்கனைகளை அச்சுறுத்தி, மிரட்டிக்கொண்டிருக்கிறது. இந்தக் குண்டர்கள்மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

இந்தப் பிரச்சனையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடனடியாகத் தலையிட்டு, தில்லி காவல்துறையினர் குற்றஞ்சாட்டப்பட்ட கயவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட, பிரதமரை வலியுறுத்த வேண்டும், அதன்மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். நாட்டின் மிக உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருப்பவர் ஒரு பெண்ணாகவும் இருப்பதன் காரணமாக, பெண்களுக்காகக் குறைந்தபட்சம் இதையாவது அவர் செய்திட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் வீராங்கனைகள் அனைவரையும் நாங்கள் வாழ்த்துகிறோம், பாராட்டுகிறோம். குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக, ஒன்றிய அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்காதபட்சத்தில், வரவிருக்கும் காலங்களில் போராட்டங்கள் தீவிரமாகும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.