களப் போராட்டங்களின் தளபதி
கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், ஒட்டுமொத்த மதச்சார்பற்ற- ஜனநாயக இயக்கத்திற்கும் அதிர்ச்சி அளிக்கின்ற மிகப்பெரும் இழப்பு, தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவாகும்.
சுமார் ஐம்பது ஆண்டுகள் இந்திய அரசியல் இயக்க வரலாற்றில் நிறைந்து நின்றவர் அவர். ஒரு கம்யூனிஸ்ட் சிந்தனையாளர், மார்க்சிய அறிஞர், கட்சி அமைப்பாளர், களப் போராட்டங்களின் தளபதி, எழுத்தாளர், பேச்சாளர், மக்கள் பிரதிநிதி என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கியவர் அவர். இட்டு நிரப்ப முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ள இழப்பு இது.
அவருடன் பணியாற்றிய நினைவுகள் மனதில் நிரம்பியுள்ளன.
லால் சலாம் தோழர் சீத்தாராம்!
- ஏ.கே.பத்மநாபன், சிபிஎம் மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர்
பெண்கள் அமைப்புக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவு எனக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது.
“சர்வாதிகாரம், பிற்போக்குக் கொள்கைகள், பழமைவாதம், மனித உரிமைகள் மறுப்பு ஆகியவற்றை ஏற்ற கருத்துவாதிகளையும் அவர்களின் நடவடிக்கைகளையும் எதிர்த்து நடக்கும் தொடர் போராட்டத்தில் முன்னணி வீரராக விளங்கியவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி.
“சர்வாதிகாரம், பிற்போக்குக் கொள்கைகள், பழமைவாதம், மனித உரிமைகள் மறுப்பு ஆகியவற்றை ஏற்ற கருத்துவாதிகளையும் அவர்களின் நடவடிக்கைகளையும் எதிர்த்து நடக்கும் தொடர் போராட்டத்தில் முன்னணி வீரராக விளங்கியவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் யெச்சூரியின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்”
- காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்
இந்திய அரசியல்வாதிகளில் தலைசிறந்த தலைவர்!
“தலைசிறந்த இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர். மிகச்சிறந்த ஜனநாயகவாதி. தொழிலாளர் நலனுக்காக பாடுபட்டவர். மிகச்சிறந்த எழுத்தாளர். நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் எழுப்பியதோடு, முக்கியப் பிரச்சனைகளில் தனது தரப்பு வாதத்தை ஆணித்தரமாக பதிவு செய்த பெருமைக்குரியவர் சீத்தாராம் யெச்சூரி. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். அவரது மறைவு இந்திய நாட்டுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.”
- முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்
இந்திய அரசியலுக்கே மிகப்பெரிய இழப்பு!
“இந்திய அளவிலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்த முன்னோடிகளோடு இணைந்து பணியாற்றியவர். தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) இயக்கத்தின் நிறுவனத் தலைவரான ஜி.கே. மூப்பனாரோடு மிகுந்த அன்பு கலந்த பாசத்தோடு பழகியவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய அரசியலுக்கே மிகப்பெரிய இழப்பாக அமைகிறது.”
- ஜி.கே.வாசன் (த.மா.கா)
மிகச்சிறந்த நிர்வாகி!
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கட்சியை மிகச் சிறப்பாக நிர்வகித்தவர். அவரது மறைவு இந்திய அரசியலுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.”
- ஈ.ஆர். ஈஸ்வரன் (கொ.ம.தே.க)
பொதுவுடமை இயக்கத்தின் தனிப்பெரும் தலைவரை இழந்தோம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)யின் அகில இந்திய பொதுச்செயலாளர் பொதுவுடமை சித்தாந்தத்தின் தனிப்பெரும் தலைவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி (72) அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்தியை அறிந்து மிகுந்த மனம் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவு இந்திய பொதுவுடமைச் சமூகத்திற்கும், மார்க்சிய கண்ணோட்டத்திற்கும் சிந்தனைக்குமான பேரிழப்பாகும். மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என முனைந்து செயலாற்றியவர். பொதுவுடமை தலைவருக்கான சிறந்த எடுத்துக்காட்டாக தன் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒப்படைப்பு செய்வதை முன் கூட்டியே அறிவித்த மகத்தான பொதுவுடமைத் தலைவர் சீத்தாராம் யெச்சூரி என்பதை வரலாறு எப்போதும் நினைவு கூரும்.
மதிப்புமிக்க தலைவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் மற்றும் பொதுவுடமை சிந்தனையாளர்கள் அனைவருக்கும் ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆழ்ந்த வருத்தங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- இரா. அதியமான், நிறுவனர்-தலைவர், ஆதித்தமிழர் பேரவை.