18ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று பெரும்பான்மை இழந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் 3ஆவது முறையாக மோடி மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார். குறிப்பாக மோடி பிரதமர் ஆனதற்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் ஆகிய 2 கட்சிகளின் ஆதரவு மிக முக்கியம் என்ற நிலையில், இரண்டு கட்சிகளும் தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு (பீகார் - ஐக்கிய ஜனதாதளம், ஆந்திரா - தெலுங்குதேசம்) ரூ.1 லட்சம் கோடி அளவில் நிதி, சிறப்பு அந்தஸ்து கோரியது.
ஆனால் பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க விரும்பாத மோடி அரசு, தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளின் ஆதரவு நீடித்தால் மட்டுமே ஆட்சியை காப்பாற்ற முடியும் என்பதை கருத்தில் கொண்டு மற்ற மாநிலங்களை விட பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு பல்வேறு சலுகைகளை பட்ஜெட்டில் வாரி இறைத்துள்ளது.
ஆந்திரா, பீகார் மாநிலங்களும்... பட்ஜெட் அறிவிப்புகளும்...
v பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பீகார், ஆந்திர மாநிலங்களின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
vபீகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கரூ. 26,000 கோடி ஒதுக்கீடு,v பீகாரின் கயா பகுதியில் தொழில்துறை முனையம்,
v பீகாருக்கு வெள்ளம் மற்றும் பேரிடர் நிவாரண நிதியாக ரூ.11,000 கோடி ஒதுக்கீடு.
v பீகாரில் விமான நிலையங்கள், மருத்துவ மனைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி கள் மேற்கொள்ளப்படும்.
v ஆந்திர பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக தலைநகராக உருவாகும் அமராவதியை மேம்படுத்த சிறப்பு நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
v ஆந்திரத்தில் மின்சாரம், ரயில்வே, சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும். அம்மாநிலத்தின் பின்தங்கி யுள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் நிதிஒதுக்கப்படும்.
மோடி அரசை காப்பாற்றவே பட்ஜெட் தயாரிப்பு
மோடி அரசை காப்பாற்ற வேண்டும் என்று ஒன்றிய பட்ஜெட்டை தயாரித்துள்ளனர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”இது “நாட்டின் முன்னேற்றத்திற்கான” பட்ஜெட் அல்ல, “மோடி அரசைக் காப்பாற்ற” பட்ஜெட் தயாரித்துள்ளனர். 10 ஆண்டுகள் தொடர் போராட்டத்திற்கு பிறகு வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஆனால் வழக்கம் போல பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு எந்த திட்டமும் இல்லை. குறிப்பாக இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கான திட்டம் எதுவும் இல்லை. விவசாயம், சுகாதாரம், கல்வி, பொதுநலம் மற்றும் பழங்குடியினர் ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட குறைவாகவே செலவிடப்பட்டுள்ளது, ஏனெனில் இவை பாஜகவின் முன்னுரிமைகள் அல்ல. அதேபோல, மூலதனச் செலவில் ரூ.1 லட்சம் கோடி குறைவாகச் செலவிடப்பட்டால், வேலை வாய்ப்புகள் எங்கிருந்து பெருகும்? தினமும் ரயில் விபத்துகள் நடக்கின்றன, ரயில்கள் நிறுத்தப்படுகின்றன, பெட்டிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது, சாதாரண பயணிகள் சிரமப்படுகின்றனர், ஆனால் ரயில்வே பற்றி பட்ஜெட்டில் எதுவும் கூறப்படவில்லை, பொறுப்புக்கூறல் இல்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி எதுவும் கூறப்படவில்லை, அதேசமயம் மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாமல் தாக்கல் செய்யப்படும் ஐந்தாவது பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை, பொதுமக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் மட்டுமே பாஜக மும்முரமாக உள்ளது” என கார்கே தெரிவித்துள்ளார்.
நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளும் பட்ஜெட்
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பட்ஜெட் குறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,“பாஜகவின் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளும் (குர்சி பச்சாவோ) பட்ஜெட் இது. மற்ற மாநிலங்களின் பணத்தில் பாஜக தனது கூட்டணி மாநிலங்களுக்கு வெற்று வாக்குறுதியை கொடுத்துள்ளது. சாதாரண குடிமக்களுக்கு பட்ஜெட்டில் எந்த நிவாரணமும் இல்லை. மாறாக, கூட்டாளிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. மேலும், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டுகள் காப்பி (Copy), பேஸ்ட் (Paste) செய்யப்பட்டுள்ளன” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே வரவில்லை
திமுக மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,”பாரபட்சமாக ஒரு சில மாநிலங்களுக்கு மட்டுமே நிதியை அறிவித்துள்ளது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே வரவில்லை. ஒன்றிய அரசு மற்ற மாநிலங்களையும் பாரபட்சமின்றி பார்க்கவேண்டும். பாஜகவின் அணுகுமுறை முன்பை விட தற்போது மிக மோசமாக உள்ளது. பீகார், ஆந்திராவுக்கு கேட்டதை எல்லாம் கொடுத்துவிட்டு, பிற மாநி லங்களை வஞ்சிப்பதை ஏற்க முடியாது” என அவர் கூறியுள்ளார்.
பட்ஜெட்டில் அப்படி என்ன உள்ளது?
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில்,”பாஜகவினர் அரசைக் காப்பாற்ற விரும்புகிறார்கள். ஆந்திராவுக்கும் பீகாருக்கும் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம். ஆனால், பிரதமர்களை வழங்கும் உத்தரப்பிரதேசத்தின் விவசாயிகளுக்கு பெரிய அறிவிப்புகள் ஏதாவது உள்ளதா? விவசாயிகளின் விளைபொருள்கள் மற்றும் வருமானங்களுக்கான திட்டங்கள் ஏதாவது பட்ஜெட்டில் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகாரை ஏமாற்றுகிறது மோடி அரசு
ராஷ்டிரிய ஜனதாதள மூத்த தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி,”பீகாரை ஏமாற்றும் வகையில் ஒன்றிய பாஜக அரசு செயல்படுகிறது. நிதிஷ்குமாரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை அதனால் நிதிஷ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும். மாநிலத்தில் வெள்ளப் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. பாலங்கள் உடைந்து வருகின்றன; மக்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்குகின்றன; மீட்புப் பணியும் நடைபெறவில்லை. பீகாரில் வேலைவாய்ப்பும் இல்லை ; விவசாயிகளுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை; அதே போல பட்ஜெட்டில் பீகாருக்கு ஒன்றுமில்லை” என அவர் கூறினார்.