புதுதில்லி, டிச.10- அரசமைப்புச் சட்டத்தின்படி நடந்து கொள்வோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், அதனை மீறி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இவர்மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் சேகர் குமார் யாதவ் என்பவர், விசுவ இந்து பரிசத் நடத்திடும் கூட்டத்தில் கலந்துகொண்டு, சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால் கோடாது நீதி வழங்க வேண்டும் என்னும் கோட்பாட்டையும், அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களையும் அரித்து வீழ்த்திடும் விதத்தில் நடந்து கொண்டிருக்கிறார். இவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி பிருந்தா காரத், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
அதன் சாராம்சம் வருமாறு:
“அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி, சேகர் குமார் யாதவ், விசுவ இந்து பரிசத் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியிருப்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இந்த உரையானது யு-டியூப் சமூக ஊடகத்திலும் மற்றும் பல ஊடகங்களிலும் விரிவாக வெளியாகி இருக்கின்றன. இதன்மீது ‘எக்ஸ்’ சமூக ஊடகத்திலும் பலர் கருத்துக்களைக் கூறி வருகின்றனர். அவர் பேசும்போது அங்கே கூடியிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் மத்தி யிலும் மற்றும் மேற்படி ஊடகங் களைக் கண்ணுறுவோர் மத்தியிலும் அவருடைய பேச்சு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் பேசிய பேச்சை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
அக்டோபர் 8 ஞாயிறு அன்று நீதிபதி யாதவ், விசுவ இந்து பரிசத் ஏற்பாடு செய்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். விசுவ இந்து பரிசத் என்பது அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தங்கள் குறிக்கோள் “இந்து சமூ கத்தினரை அணிதிரட்டி, இந்துக் களைப் பாதுகாத்து, அவர்களுக்கு சேவை செய்வது” என்று கூறுகிறது. இவ்வாறு ஒரு தீவிரமான மதம் சார்ந்த அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஒருவர் பங்கேற்றிருப்பது ஒரு ஆழமான பிரச்சனையாகும். நீதித்துறையின் நடத்தை விதியை மீறி செயல்பட்டுள்ள ஒரு நீதிபதி குறித்து, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதி பதிக்கு, நான் கொண்டுவரும் முதல் விஷயம் இதுவாகும்.
விசுவ இந்து பரிசத் நடத்திய அந்தக் கூட்டத்தில் ஒரேமாதிரியான சிவில் சட்டம் (uniform civil code), மத மாற்றம் தொடர்பாக கொண்டுவரப்படவுள்ள மற்றும் வக்ப் வாரிய திருத்தச் சட்ட முன்வடிவு முதலானவையும் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரச்சனைகள் மீது விசுவ இந்து பரிசத் உட்பட பல அமைப்புகள் மதவெறிப் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வரு கின்றன என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
இதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்று நீதிபதிகள் தங்கள் கருத்துக்களை கூறலாமா? மூன்றா வதாக, அவர் பேசும்போது “இது இந்துஸ்தான் என்றும், இந்த நாடு இங்கே வாழ்பவர்களில் பெரும் பான்மையானவர்களின் விருப்பத்திற் கிணங்கதான் செயல்பட வேண்டும் என்றும்”, பேசியிருக்கிறார். “பெரும்பா ன்மையானவர்களின் நலனை யும் மகிழ்ச்சியையும் உத்தரவாதப் படுத்தப்படுபவைதான் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்” என்றும் அவர் பேசியிருக்கிறார்.
வெறுப்பை உமிழும் பேச்சு
மேலும் அவர், “பசு, பகவத் கீதை, கங்கை நம் கலாச்சாரத்தை வரையறுக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் ஹர்பலா தேவி விக்கிரகம் இருக்கிறது, ஒவ்வொரு குழந்தையும் ராமன். இதுவே என் தேசம்” என்றும் பேசியிருக்கிறார்.
“நீங்கள் ஒரு வழக்குரைஞராக இருக்கலாம், ஒரு வணிகராக இருக்க லாம் அல்லது ஒரு மாணவனாக இருக்கலாம், ஆயினும்உங்கள் அடையாளத்தின் முதலில் வருவது நீங்கள் ஒரு இந்து என்பதேயாகும். இந்த நாட்டை உலக நாயகனாக உயர்த்தக்கூடிய வல்லமை படைத்த வர்கள் இந்துக்கள் மட்டுமே என்று விவேகானந்தர் கூறியிருக்கிறார். வேறு எவரும் அதைச் செய்ய முடி யாது.
இந்த லட்சியத்தை ஒருபோதும் மங்க விடாதீர்கள்,” என்றும் பேசியிருக் கிறார். அவர் தன் உரையை நிறைவு செய்யும் சமயத்தில், “ஒவ்வொரு இந்துவும் அஹிம்சை மற்றும் கருணைக்கு பேர்போனவர்கள் என்றாலும், அதனை கோழைத்தனம் என்று கருதிவிடக்கூடாது” என்றும் கூறியிருக்கிறார். இவை அவர் உதிர்த்த சொற்களில் சிலவாகும். ஒவ்வொரு நீதிபதியும் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டபின்புதான் நீதிபதி யாகிறார்கள். இவ்வாறு இவர் பேசியிருப்பது அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறிய செயலாகும்.
இந்த பேச்சு வெறுப்பை உமிழும் பேச்சாகும். இந்த பேச்சு, அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலாகும். நீதித்துறையின் மீது தாக்குதல் இந்த பேச்சு, ஒரு மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக நாட்டின் கூட்டு மனசாட்சியை அவமதிப்பதாகும். ஒரு நீதிபதியே இவ்வாறு பேசியிருப்பதன் மூலம் நீதிமன்ற செயல்முறைகள் மீதும் அவர் தாக்குதலைத் தொடுத்திருக்கிறார். சிறுபான்மை சமூகத்திற்கு எதி ராகவும், பெரும்பான்மை இந்துக் களுக்கு ஆதரவாகவும் தன் அணுகு முறை இருந்திடும் என்று பகிரங்கமாகத் தன் கருத்துக்களை கூறியிருக்கும் ஒருவரிடம் எவரொருவரும் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும். இத்தகைய நபர், நீதித்துறைக்கே அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறார். நீதிமன்றத்தில் அத்தகைய நபருக்கு இடமில்லை, இருக்கவும் கூடாது. இந்தப் பிரச்சனை மீது உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு பிருந்தாகாரத் தன்னு டைய கடிதத்தில் கோரியிருக்கிறார்.
(ந.நி.)