india

img

11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனு

2002 குஜராத் கலவரத்தின் போது, கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது அகமதாபாத்தில் உள்ள ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணி பெண் கொடூரமாக கூட்டுப் பாலியில் வன்கொடுமை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினர் 7 பேரை ஒரு கும்பல் கொலை செய்தது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த வழக்கின் குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்த குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பலர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். குறிப்பாக, விடுதலையான குற்றவாளிகளுக்கு சிறை வாசலிலேயே மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு கொடுத்தது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். நாளை குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று பில்கிஸ் பானு தரப்பு வழக்கறிஞர் ஷோபா குப்தா வலியுறுத்தினார். இதனையடுத்து இந்த மனு பரிசீலிக்கப்படும் என்றும், விசாரணை தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியுள்ளார்.