பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்பாக ஒன்றிய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு, நவம்பர் 8-ஆம் தேதி மோடி அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தது. இதன்படி, புழக்கத்திலிருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதற்குப் பதிலாக புதிய ரூ.2000, ரூ.500, ரூ.100 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானர். இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளிலும், ஏ.டி.எம். வாசல்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் மன உளைச்சலுடன் காத்துக்கிடந்தனர். சில இடங்களில் உயிரிழப்புகளும் நேர்ந்தன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், கட்டுமானத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கடும் பின்னடைவைச் சந்தித்தன.
இந்த நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை முடிவு எடுக்கப்பட்டது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் ஒன்றிய அரசு விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பணமதிப்பிழப்பு செய்ய பின்பற்றிய வழிமுறைகள் சரியானதா என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.